தலைகீழாக மாறிய நிலைமை! பிரித்தானிய 'சிவப்பு பட்டியல்' நாடுகளில் இந்தியா சேர்ப்பு
புதிய கோவிட் மாறுபாட்டின் அச்சத்தின் பேரில், பிரித்தானியாவுக்குள் நுழைய தடைசெய்யப்பட்ட நாடுகளின் "சிவப்பு பட்டியலில்" இந்தியா சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த பயணத் தடை ஏப்ரல் 23 (வெள்ளிக்கிழமை) பிரித்தானிய நேரப்படி அதிகாலை 4 முதல் அமுலுக்கு வருகிறது.
கடந்த 10 நாட்களில் இந்தியாவில் இருந்து அல்லது இந்தியாவிற்கு பயணம் செய்த மக்கள் பிரித்தானியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் அல்லது ஐரிஷ் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள், அல்லது பிரித்தானிய குடியுரிமை உள்ளவர்கள் அனுமதிக்கப்படுவார்கள், ஆனால் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டலில் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அதி தீவிரமாக பரவிவரும் "B.1.617" என அழைக்கப்படும் இரட்டை மரபணு உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸால் பிரித்தானியாவில் இதுவரை 103 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக பிரித்தானிய சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் (Matt Hancock) கூறினார்.
இந்த 'B.1.617' புதிய கொரோனா வைரஸ் தற்போது அளிக்கப்படும் சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசிகளுக்கு கட்டுப்படுமா, அல்லது அதிகம் பரவக்கூடிய ஒன்றாக மாறுமா என்பதை அறிய சோதனை மாதிரிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன என்றார்.
ஆய்வின் தரவுகளை படித்த பிறகு, ஒரு முன்னெச்சரிக்கை அடிப்படையில், இந்தியாவை சிவப்பு பட்டியலில் சேர்க்கும் கடினமான ஆனால் முக்கியமான முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.
நான்கு மாதங்களுக்கு முன்னர் தான் பிரித்தானிய வகை வைரஸின் பரவலைத் தடுக்க அந்நாட்டிலிருந்து வரும் விமானங்களை இந்தியா தடை செய்தது.
இப்போது, 'இந்திய வேரியன்ட்' பரவுவதைத் தடுக்க பிரித்தானியா இந்தியாவுக்கு பயணத் தடை விதித்துள்ளது. கொரோனாவின் தாக்கத்தால் நாடுகளுக்கு இடையிலான நிலைமை எந்த நேரத்திலும் தலைகீழாக மாறக்கூடும் என்பதை இது காட்டுகிறது.