E100 எரிபொருளை பயன்படுத்த இந்திய அரசு அனுமதி
இந்திய அரசு, வாகனங்களில் 100 சதவீதம் எத்தனால் (E100) எரிபொருளை பயன்படுத்த அனுமதிக்கும் வகையில் மத்திய மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் செய்யும் வரைவு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம், எத்தனால் கலவை எரிபொருளிலிருந்து முழுமையான எத்தனால் எரிபொருளுக்கு இந்தியா நகர்கிறது.
முன்னதாக E10, E20 போன்ற கலவைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில், இப்போது E85 மற்றும் E100 ஆகியவற்றை சட்டத்தில் சேர்க்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதேபோல், B10 (10% பயோடீசல்) என்பதற்குப் பதிலாக B100 (முழுமையான பயோடீசல்) பயன்படுத்த அனுமதி வழங்கப்பட உள்ளது.

இந்தியாவில் தற்போது 20 பில்லியன் லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்யப்படுகிறது.
ஆனால், 20 சதவீத கலவை (E20) தேவைக்கு 11 பில்லியன் லிட்டர் மட்டுமே தேவைப்படுவதால், உற்பத்தியாளர்கள் அதிக உற்பத்தி திறனை பயன்படுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர்.
இதனை சமாளிக்க, அரசு எத்தனாலை பிரதான எரிபொருளாக மாற்றும் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.
உலகளவில், பிரேசிலில் 2003 முதல் Flex-fuel வாகனங்கள் அறிமுகமாகி, இன்று 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் எத்தனால் அல்லது பெட்ரோல் கலவையில் இயங்குகின்றன. இந்தியாவும் இதே பாதையில் முன்னேறி வருகிறது.
எத்தனால் திட்டம் விவசாயிகளுக்கு நேரடி வருமானத்தை வழங்குவதோடு, வெளிநாட்டு எண்ணெய் இறக்குமதி செலவையும் குறைக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளில், சுமார் 19.3 பில்லியன் டொலர் வெளிநாட்டு செலவுகளை இந்தியா சேமித்துள்ளது.
இந்த மாற்றம், இந்தியாவின் பசுமை எரிசக்தி முயற்சியில் முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |