இந்தியா தான் ஜெயிக்கும்... அதுவும் ஆகஸ்ட்-செப்டம்பரில் நடப்பதால் வாய்ப்பு அதிகம்: அடித்து சொல்லும் மைக்கல் வாகன்
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணியே வெல்லும் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கல் வாகன் கூறியுள்ளார்.
கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை துவங்கவுள்ளது.
இதற்காக இந்திய அணி, இங்கிலாந்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த தொடர் குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான மைக்கல் வாகன் கூறுகையில், என்னைப் பொறுத்தவரை இந்திய அணியே இந்த தொடரை வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ளது.
ஏனெனில், இங்கிலாந்து அணி சமீபத்தில் தான், நியூசிலாந்து அணியுடன் தொடரை இழந்தது. அதுமட்டுமின்றி இங்கிலாந்து அணியில் முக்கிய வீரரான பென் ஸ்டோக்ஸ் இல்லை.
அவரது இடத்தில், நீங்கள் வேறு எந்த ஒரு வீரரை இறக்கினாலும், அவருக்கு இணையாக எந்த ஒரு வீரரும் வரமாட்டார்.
இது இங்கிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவு. கடந்த தொடர்களை போன்று இல்லாமல் இந்த தொடரில் இந்திய அணி நிச்சயம் சிறப்பாக விளையாடும் என்று நம்புகிறேன்.
மேலும், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இங்கிலாந்தின் ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சிற்கே சாதமாக இருக்கும் என்பதால், இதை இந்திய அணி தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும். இதை கூறுவதற்கு எனக்கு கஷ்டமாகத் தான் இருக்கிறது.
இருப்பினும், இந்திய அணி இந்த தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றும் என்று அவர் கூறியுள்ளார்.