தீவிரமடையும் ஈரான் - இஸ்ரேல் போர்... இந்தியா எடுத்த முக்கிய முடிவு: இனி இந்த நாட்டில் இருந்து இறக்குமதி
ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதலை முன்னெடுத்த நிலையில் சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில் ஜூன் மாதத்தில் ரஷ்ய எண்ணெய் கொள்முதலை இந்தியா அதிகரித்துள்ளது.
மொத்த அளவை விட அதிகம்
சவுதி அரேபியா மற்றும் ஈராக் போன்ற மத்திய கிழக்கு நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்யும் மொத்த அளவை விட அதிகமாக ஜூன் மாதத்தில் இந்தியா இறக்குமதி செய்துள்ளது.
ஜூன் மாதத்தில் இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஒரு நாளைக்கு 2 முதல் 2.2 மில்லியன் பீப்பாய்கள் ரஷ்ய கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய வாய்ப்புள்ளது. இது கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அதிகபட்சமாகும்.
ஈராக், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத் ஆகிய நாடுகளிலிருந்து வாங்கப்பட்ட மொத்த அளவை விட அதிகம். ஜூன் மாதத்தில் அமெரிக்காவிலிருந்து இறக்குமதியும் ஒரு நாளைக்கு 439,000 பீப்பாய்கள் என உயர்ந்தது, இது முந்தைய மாதத்தில் வாங்கப்பட்ட 280,000 பீப்பாய் எண்ணிக்கையிலிருந்து ஒரு பெரிய அதிகரிப்பு.
உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் இறக்குமதி மற்றும் நுகர்வு நாடான இந்தியா, வெளிநாட்டிலிருந்து சுமார் 5.1 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை வாங்கியது.
பொதுவாக மத்திய கிழக்கிலிருந்து எண்ணெயைப் பெற்று வரும் இந்தியா, பிப்ரவரி 2022 இல் உக்ரைன் படையெடுப்பிற்குப் பிறகு ரஷ்யாவிலிருந்து அதிக அளவு எண்ணெயை இறக்குமதி செய்யத் தொடங்கியது.
மேற்கத்திய நாடுகளின் தடைகள் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் கொள்முதலைத் தவிர்ப்பதன் காரணமாக, ரஷ்ய எண்ணெய் மற்ற சர்வதேச அளவுகோல்களுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க தள்ளுபடியில் இந்தியாவிற்கு கிடைத்தது.
ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படும்
இதனிடையே, இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான இராணுவ மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் மற்றும் மிகப்பெரிய எரிவாயு ஏற்றுமதி போக்குவரத்திற்கு வழிவகுக்கின்ற ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அச்சுறுத்தியுள்ளது.
இந்தியா தனது மொத்த எண்ணெயில் 40% மற்றும் எரிவாயுவில் பாதியை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இறக்குமதி செய்கிறது. தற்போது இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் தாக்குதல் முன்னெடுத்துள்ள நிலையில் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படும் அபாயம் உள்ளது.
மட்டுமின்றி ஈரானிய அடிப்படைவாதிகளும் அரசு ஊடகங்களும் இனி எண்ணெய் பீப்பாய்க்கு 400 அமெரிக்க டொலர்களாக உயரும் என்றும் எச்சரித்துள்ளனர். இருப்பினும், ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படுவதால் சீனாவும் பாதிக்கும் என்பதால் அதற்கான வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.
சீனா தனது கடல்வழி கச்சா எண்ணெயில் 47 சதவீதத்தை மத்திய கிழக்கு வளைகுடாவிலிருந்து இறக்குமதி செய்கிறது. ஆனால், ரஷ்ய எண்ணெய் சூயஸ் கால்வாய், கேப் ஆஃப் குட் ஹோப் அல்லது பசிபிக் பெருங்கடல் வழியாக இந்தியா வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |