இந்தியாவில் கொரோனா உச்சம் எப்போது? பகீர் கிளப்பிய அமெரிக்க விஞ்ஞானி
இந்தியாவில் ஜனவரி மாதம் கொரோனா உச்சமடையலாம் என்று அமெரிக்க மருத்துவ விஞ்ஞானி ஒருவர் எச்சரித்துள்ளார்.
இந்தியாவில் ஓமிக்ரான் தொற்று காரணமாக கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுக்கத்தொடங்கியுள்ளது. நேற்று ஒரேநாளில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 100 பேருக்கு புதிதாக கொரோனா உறூதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் தேர்தல் பரப்புரைகளில் பிரதமர் நரேந்திர மோடியும், உத்தரபிரதேச முதல்வர் ஆதித்யநாதும் மும்முரமாக கலந்து கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், அமெரிக்க மருத்துவ விஞ்ஞானி ஒருவர் கடும் எச்சரிக்கை தகவலை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் ஜனவரி மாதம் கொரோனா உச்சமடையும் என்று டாக்டர் கிறிஸ்டோபர் முராரே தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில், ‘உலகளாவிய சுதந்திரமான சுகாதார ஆராய்ச்சி மையம்’ என்ற மையத்தின் தலைவராக இவர் செயல்பட்டு வருகிறார்.
இந்தியாவில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ள அவர், இந்தியாவை பொறுத்தவரை ஜனவரி மாதம் கொரோனா உச்சம் பெறும் என கருதுகிறோம். கொரோனா உச்சமடையும்போது தினமும் லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படலாம்.
அதேவேளை கடந்த அலையான டெல்டா பாதிப்புடன் ஒப்பிடும்போது இப்போது மருத்துவமனைகளில் அனுமதிக்கபடுவோர் எண்ணிக்கையும், உயிரிழப்பும் குறைவாகவே இருக்கும் என தெரிவித்துள்ளார்.
ஓமிக்ரான் பரவல் வெறும் இரண்டு மாதத்தில் உலகம் முழுக்க 3 பில்லியன் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் டெல்டா அலையின் போதிருந்த அதே வேகம் தற்போதும் காணப்படும் எனவும், ஜனவரி இறுதி அல்லது பிப்ரவரி தொடக்கத்தில் இந்தியாவில் கொரோனா உச்சம் காணும் என்றார்.