இந்தியாவில் கொரோனாவின் 3-வது அலை தாக்குவதை தவிர்க்க முடியாது: அறிவியல் ஆலோசகர் பரபரப்பு பேட்டி
கொரோனா வைரஸ் உருமாறுவதன் காரணமாக இந்தியாவில் அதன் 3-வது அலையை தவிர்க்கவோ தடுக்கவோ முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்றாவது அலை எப்போது உருவாகும் என தெரியாததால், அதனை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் கே. விஜய்ராகவன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவலின் வேகம் அதிகரித்துவருகிறது. கொரோனா முதல் அலையைவிட இரண்டாவது அலையின் தாக்கம் கடுமையானதாகவும் சமாளிக்க முடியாததாகவும் இருந்துவருகிறது. இதனால் நாள் ஒன்றுக்கு 4 லட்சம் பேர்வரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
A phase three is inevitable, given the higher levels of circulating virus but it is not clear on what time scale this phase three will occur. We should prepare for new waves: K VijayRaghavan, Principal Scientific Advisor to Centre pic.twitter.com/c6lRzYaV2q
— ANI (@ANI) May 5, 2021
இந்தநிலையில், இந்திய அரசின் அறிவியல் தலைமை ஆலோசகர், மருத்துவர் விஜய்ராகவன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், "இந்தியாவிலுள்ள ஆராய்ச்சியாளர்களும், உலக அளவிலுள்ள ஆராய்ச்சியாளர்களும் கொரோனா திரிபுகளை எதிர்பார்த்து வேலை செய்துகொண்டிருக்கிறோம்.
அந்த திரிபுகளுக்கு எதிராக வேகமாக வினையாற்றவும், முன்னதாக எச்சரிக்கை விடுக்கவும் முயற்சி செய்துவருகிறோம். அதற்காக தீவிரமான ஆய்வுகள் இந்தியாவிலும், வெளிநாடுகளில் நடைபெற்றுவருகின்றன.
கொரோனா தடுப்பூசிகள் தற்போது கொரோனா திரிபுகளுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகின்றன. ஆனால், மேலும் பல புதிய திரிபுகளும் உலகம் முழுவதும் வரும். அவை இந்தியாவிலும் வரும்.
அதனால் கொரோனாவின் மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது. எப்போது மூன்றாவது கட்டம் பரவல் நடைபெறும் என்று உறுதியாக சொல்ல முடியாது. நாம் புதிய அலைக்குத் தயாராக வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.