புற்றுநோய்க்கு 7 நிமிடத்தில் சிகிச்சை - எப்படி செயல்படும்? விலை என்ன?
7 நிமிடத்தில் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருந்தை இந்திய நிறுவனம் ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது.
புற்றுநோய்க்கு 7 நிமிடத்தில் சிகிச்சை
இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 15 லட்சத்திற்கும் அதிகமானோர் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் (ICMR) கீழ் உள்ள தேசிய புற்றுநோய் ஆராய்ச்சித் திட்டம் (NCRP) தெரிவித்துள்ளது.
புற்று நோய் பாதிப்புகளுக்கு தற்போது கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சைக்கு சில மணி நேரம் வரை ஆகிறது.
இந்நிலையில், 'ரோச் பார்மா' என்ற இந்திய நிறுவனம் வெறும் 7 நிமிடங்களில் புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கும் டெசென்ட்ரிக் எனப்படும் அட்சோலிசுமாப் மருந்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது வழக்கமான நரம்பு வழி சிகிச்சையை போல் இல்லாமல், தோலுக்கு அடியில் ஊசி மூலம் மருந்து செலுத்தப்படுகிறது.
இந்த ஊசி, நான்-ஸ்மால் செல் நுரையீரல் புற்றுநோய்(NSCLC) உள்ள நோயாளிகளுக்கானது. இந்தியாவில் ஏற்படும் நுரையீரல் புற்றுநோய் பாதிப்புகளில் பெரும்பாலானவை இந்த வகை புற்றுநோயே ஆகும்.
எப்படி செயல்படும்?
நோயாளியின் புற்றுநோய் செல்களில் PD-L1 புரதத்தின் அளவு அதிகமாக உள்ளதா என்பதை மருத்துவர்கள் முதலில் பரிசோதிப்பார்கள். அதிக PD-L1 அளவு கொண்ட நோயாளிகள் இந்த நோயெதிர்ப்பு சிகிச்சை மருந்தினால் பயனடைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
கீமோதெரபி சிகிச்சையில் புற்றுநோய் செல்களை நேரடியாகத் தாக்கி, ஆரோக்கியமான செல்களையும் சேதப்படுத்தக்கூடும்.
ஆனால் இந்த சிகிச்சையில் உடலின் சொந்த நோயெதிர்ப்பு மண்டலமே புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது. கீமோதெரபியை விட இது பெரும்பாலும் குறைவான கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

புற்றுநோய் செல்கள், நோயெதிர்ப்பு மண்டலத்திடம் இருந்து தங்களை மறைத்துக்கொள்ள பயன்படுத்தும் PD-L1 எனப்படும் புரதத்தைத் இந்த ஊசியில் உள்ள ஏடெசோலிஸுமாப் என்ற மருந்து தடுக்கிறது.
இந்த புரதம் தடுக்கப்பட்டவுடன், உடலின் நோயெதிர்ப்பு செல்கள் புற்றுநோய் செல்களை மிகவும் திறம்பட அடையாளம் கண்டு தாக்க முடியும்.
இந்த ஊசியின் மூலம் சிகிச்சை நேரம் 80% அளவிற்கு குறையும் என்பதால், நோயாளிகள் நீண்ட நேரம் மருத்துவமனையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது.
இது இந்தியாவின் புற்றுநோய் சிகிச்சையில் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
ஆனால், இந்த மருந்தை ஒரு டோஸ் எடுத்துக் கொள்ள 3.6 லட்சம் ரூபாய் தேவைப்படும் என கூறப்பட்டுள்ளது. சிகிச்சையின் போது 6 டோஸ் வரை தேவைப்படும் என கூறப்படுகிறது. இந்த விலை சாமானியாக மக்களுக்கு மிகப்பெரும் சவாலாக உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |