கப்பல் போக்குவரத்து முடக்கம்... இந்தியாவிடம் 25 நாட்களுக்கு மட்டுமே எண்ணெய் இருப்பு
மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதட்டங்கள் மற்றும் ஈரான்-இஸ்ரேல் போர் ஆகியவற்றுக்கு மத்தியில், இந்தியாவிடம் தற்போது 25 நாட்களுக்கு மட்டுமே கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் இருப்பு உள்ளது.
இந்தியா உட்பட ஆசிய நாடுகள்
ஈரான் மீது இஸ்ரேலும், தொடர்ந்து அமெரிக்காவும் தாக்குதலை முன்னெடுத்த நிலையில், ஹார்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது.

இந்த பாதை வழியாக செல்லும் எந்தவொரு கப்பலும் தாக்குதலுக்கு இலக்காகும் என்று ஈரானிய இராணுவம் எச்சரித்துள்ளது. ஓமன் மற்றும் ஈரான் இடையே அமைந்துள்ள இந்த பாதை, உலக எண்ணெய் வர்த்தகத்திற்கு முக்கியமானதாக கருதப்படுகிறது.
ஹார்முஸ் நீரிணை மூடப்பட்ட விவகாரம் பல நாடுகளின் எண்ணெய் விநியோகத்திற்கு பேரிடியாக அமைந்துள்ளது, இதில் இந்தியா உட்பட ஆசிய நாடுகள் அதிகம் பாதிக்கப்படும்.
இந்தப் பாதை மூடப்பட்டதால், உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டொலரைத் தாண்டக்கூடும். தற்போது, பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை தோராயமாக 5.58% உயர்ந்து பீப்பாய்க்கு 80.41 டொலரை எட்டியுள்ளது.
நிலையான விலை
பொதுமக்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க நிம்மதி என்னவென்றால், இந்திய அரசாங்கம் இந்த நேரத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை உயர்த்தும் எண்ணத்தைக் கொண்டிருக்கவில்லை.
பல மாநிலங்களில் தேர்தல் முன்னெடுக்கப்பட இருப்பதால், சர்வதேச சந்தையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும், உள்நாட்டில் நிலையான விலைகளைப் பராமரிக்க இந்திய அரசாங்கம் முயற்சிகள் முன்னெடுத்துள்ளது.

மேலும், நாட்டில் முக்கிய பெட்ரோலியப் பொருட்களின் கிடைக்கும் தன்மை மற்றும் மலிவு விலையை உறுதி செய்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |