'தலித் பெண்களால் தான் இந்தியா தோற்றது' ஹாக்கி வீராங்கனையின் குடும்பத்தினர் மீது சாதிவெறியை காட்டிய கும்பல்
ஒலிம்பிக்கில் அரை இறுதியில் தோல்வி அடைந்ததால், ,இந்திய மகளிர் ஹாக்கி அணி வீராங்கனை வந்தனா கட்டாரியா வீட்டின் முன்பாக சாதி ரீதியாக இழிவுபடுத்தி ஒரு கும்பல் கோஷம் எழுப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் ராணி ராம்பால் தலைமையில் இந்திய மகளிர் ஹாக்கி அணி பங்கேற்றது.
முதல் 3 ஆட்டங்களில் இந்திய வீராங்கனைகள் வெற்றியை நழுவவிட்டனர். இதனால் காலிறுதியை கூட இந்திய மகளிர் அணியால் தாண்ட முடியாது என்கிற எகத்தாளங்கள் எழுந்தன.
பின்னர் நடைபெற்ற 2 போட்டிகள் அடுத்தடுத்து வெற்றி பெற்று பதிலடி கொடுத்தனர். கால் இறுதிக்குள் கால் பதித்த இந்திய வீராங்கனைகள், வலிமையான அவுஸ்திரேலியாவுக்கு எதிராக களம் கண்டது.
அவுஸ்திரேலியாவுடன் மல்லுக்கட்டி வீழ்த்தி வரலாற்று சாதனையும் படைத்தனர் இந்திய மகளிர் அணி. வரலாற்றில் முதல் முறையாக இந்திய மகளிர் ஹாக்கி அணி அரையிறுதிக்கு தகுதி பெற்று சரித்திரம் படைத்தனர்.
உலக அளவில் 3-வது இடத்தில் இருக்கும் ஜாம்பவான் அணியான அர்ஜெண்டினாவை இந்திய வீராங்கனைகள் எதிர்கொண்டனர்.
இதனால் ஒட்டுமொத்த தேசமும் இந்த போட்டியை பேராவலுடன் எதிர்பார்த்தனர். இருப்பினும் 1-2 என்ற கோல் கணக்கில் இந்திய மகளிர் அணி வெற்றியை இழந்தது.
இருந்தபோதும் தேசம் முழுவதும் இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கான பாராட்டுகள் குவிந்தன. இனிவரும் இளம்பெண்களுக்கு முன்னுதாரண வீராங்கனைகளாக ராணி ராம்பால்களும் வந்தனா கட்டாரியாக்களும் (Vandana Katariya) திகழ்வார் என்ற புதிய சரித்திரப் பக்கத்தை டோக்கியோவில் நிகழ்த்தி இருந்தனர்.
ஒட்டுமொத்த நாடே இந்திய மகளிர் ஹாக்கி அணி வீராங்கனைகள் குறித்து பெருமிதப்பட்டுக் கொண்டிருந்த அதேநேரத்தில், ஹரித்வார் மாவட்டம் ரோஷ்னாபாத்தில் உள்ள மகளிர் ஹாக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியா வீடு முன்பு ஒரு கும்பல் திடீரென கூடியது.
ஆட்டம் பாட்டத்துடன் பட்டாசுகளை வெடித்து வெறிக்கூச்சல் போட்டது. அப்போதுவரை என்ன ஏது என்று வந்தனா கட்டாரியாவின் குடும்பத்துக்கும் புரியவில்லை. ஏனெனில் ஒலிம்பிக்கில் தோற்றுவிட்ட நிலையில் பட்டாசுகளை வெடிக்கிறார்களே என குழம்பினர்.
அப்போது அந்த கும்பல் திடீரென சாதிய வன்மத்துடன் முழக்கங்களை எழுப்பினார். இந்திய ஹாக்கி அணியில் தலித் வீராங்கனைகளை நிறைய சேர்த்ததால் தேசம் தோற்றுவிட்டது என கூச்சல் போட்டனர்.
இந்திய ஹாக்கி அணியில் இருந்து தலித் வீராங்கனைகளை விரட்டுங்கள் என அநாகரிகமான மொழியில் குரல் எழுப்பியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக வந்தனா கட்டாரியாவின் குடும்பத்தினர் பொலிஸில் புகார் கொடுத்தனர்.
இதனையடுத்து ஹரித்வார் பொலிஸார் விசாரணை நடத்தி விஜய்பால், அன்குர் பால், சுமித் சவுகான் மற்றும் அடையாளம் தெரியாத நபர் என 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த 4 பேர் மீதும் அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாகவும் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்கு போடப்பட்டுள்ளது. இவர்களில் விஜய்பால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சியில் உறையச்செய்துள்ளது.