ஆதார் போல் வீடுகளுக்கும் தனி டிஜிட்டல் எண் வழங்க உள்ள இந்தியா - என்ன பயன்?
ஆதார் போல் வீடுகளுக்கும் தனி அடையாள எண் வழங்க உள்ள இந்தியா முன்வந்துள்ளது.
வீடுகளுக்கு டிஜிட்டல் எண்
இந்தியாவில் சிம் கார்டு வாங்குவது தொடங்கி, வங்கி கணக்கு தொடங்குவது, அரசு திட்டங்களில் இணைவது உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதனால், இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் ஒரு முக்கிய ஆவணமாக உள்ளது.
இதே போல், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் புதிய அடையாள எண் உருவாக்கும் திட்டத்தை இந்திய அரசு முன்னெடுத்துள்ளது.
இந்தியாவின் தற்போதைய முகவரி அமைப்பு பல சவால்களை எதிர்கொள்கிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் முகவரிகளுக்கான டிஜிட்டல் அடையாள எண்ணை இந்தியா உருவாக்க உள்ளது.
இந்த அடையாள எண் ஜிபிஎஸ் அடிப்படையில் உருவாக்கப்படும். அஞ்சல்துறையில் பயன்படுத்தப்பட்டு வரும் பின் கோடு நம்பரின் மறுவடிவமாக இந்த டிஜிட்டல் எண் இருக்கும் என கூறப்படுகிறது.
என்ன பயன்?
இதன் மூலம், முகவரிகள் சரிவர இல்லாத கிராமங்கள், காடுகள், மலைப்பகுதிகள் போன்றவற்றில் உள்ள வீடுகளை கூட துல்லியமாக அடையாளம் காண முடியும்.
கொரியர், ஆன்லைன் ஷாப்பிங், உணவு டெலிவரி சேவைகள் வளர்ந்து வரும் நிலையில், துல்லியமான முகவரியை வைத்திருப்பது முன்னெப்போதையும் விட மிக முக்கியமானதாகிவிட்டது.
முழுமையற்ற மற்றும் தெளிவில்லாத முகவரிகளால் பல்வேறு தாமதங்கள் மற்றும் குழப்பங்கள் ஏற்படுகிறது. இது போன்ற சிக்கல்களுக்கு இந்த 10 இலக்க எண் மற்றும் எழுத்துக்களை உடைய DIGIPIN தீர்வாக அமையும்.
பயனர்களின் ஒப்புதலுடன் மட்டுமே அவர்களுடைய முகவரி விவரங்கள் பிறருக்கு தெரியபடுத்தப்படும். இந்த டிஜிட்டல் தகவல்கள் மக்களின் முகவரியை பாதுகாப்பான முறையில் அணுக அனுமதிக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்திய அஞ்சல் துறை இந்த அமைப்பை உருவாக்கி வருகிறது. இந்தத் திட்டத்தின் வரைவுப் பதிப்பு விரைவில் பொதுமக்களின் பரிந்துரைகளுக்காகப் பகிரப்படும். மேலும் இந்த ஆண்டின் இறுதிக்குள் இறுதிப் பதிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் முகவரி DPI ஆணையத்தை அமைப்பதற்கான புதிய சட்டம் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் கொண்டு வரப்படலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |