இனி டோல்கேட்டில் நிற்க வேண்டாம்; FasTag தேவை இல்லை - அரசின் அசத்தல் திட்டம்
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்காக இந்தியா முழுவதும் 1,228 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
GPS மூலம் சுங்க கட்டணம்
பல சுங்க சாவடிகளில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிநிலை இருக்கிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், பாஸ்டேக் நடைமுறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
இதனால் பயணிகள் காத்திருக்கும் நேரம் குறைந்தது. ஆனாலும் சில வினாடிகள் காத்திருக்கும் நிலை இருந்தது.
தற்போது ஒரு நொடி கூட காத்திருக்க தேவை இல்லாதது போல், GPS மூலம் சுங்க கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை மத்திய அரசு கொண்டு வர உள்ளது.
எப்படி செயல்படும்?
இந்த புதிய முறையில், செயற்கைக்கோள் உதவியுடன், மேம்பட்ட ANPR கேமராக்கள் மற்றும் வாகனங்களில் நிறுவப்பட்ட GPS அமைப்பு மூலம், தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் பயணிக்கும் தூரங்களை துல்லியமாக கண்காணித்து அதற்கேற்ப கட்டணம் வசூலிக்கப்படும்.
நெடுஞ்சாலைகளில் வாகனம் நுழைந்தவுடன், வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள On-Board Unit(OBU) மூலம் பயணிக்கும் தூரம் கணக்கிட தொடங்கும்.
வாகனம் நெடுஞ்சாலையில் இருந்து வெளியேறிய உடன், எவ்வளவு தூரம் பயணம் செய்யப்பட்டுள்ளது என்பதற்கேற்ற கட்டணம், OBU உடன் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கு அல்லது டிஜிட்டல் வாலெட்டில் இருந்து, தானியங்கி முறையில் பணம் வசூலிக்கப்படும்.
அதேவேளையில், GPS கண்காணிப்பு நடைமுறைக்கு வரும் போது, பொதுமக்களின் தனியுரிமை மற்றும் தரவு பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது.
எப்போது நடைமுறைக்கு வரும்?
இந்த GPS மூலம் சுங்கக்கட்டணம் வசூலிக்கும் நடைமுறை மே 1 ஆ,ம் திகதி முதல் அமலுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.
முதற்கட்டமாக, டெல்லி-மும்பை விரைவுச்சாலை, பெங்களூரு-சென்னை நெடுஞ்சாலை, தங்க நாற்கர வழித்தடங்கள், டெல்லி-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை, கிழக்கு மற்றும் மேற்கு புற விரைவுச்சாலைகள் ஆகிய 5 நெடுஞ்சாலைகளில் முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இந்த பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில், தினமும் இரு திசையிலும் 20 கி.மீ வரை கட்டணமில்லா பயணம் வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், வாகனங்கள் சுங்க சாவடிகளில் ஒரு வினாடி கூட நிற்க தேவை இருக்காது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |