இந்தியாவில் டிஜிட்டல் ரூபாய் சோதனை ஓட்டம்! ரிசர்வ் வங்கி அறிவிப்பு
இந்தியாவில் டிசம்பர் 1 முதல் சில்லறை வர்த்தகத்தில் டிஜிட்டல் ரூபாய் சோதனை ஓட்டம் நடத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23 பட்ஜெட் உரையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரிசர்வ் வங்கியின் ஆதரவுடன் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்திருந்தார்.
இந்நிலையில் டிஜிட்டல் ரூபாய் சோதனை ஓட்டம் வெளியீடு குறித்த அறிவிப்பினை ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பில், டிசம்பர் 1 முதல் தற்போது புழக்கத்தில் உள்ள நாணயங்களின் மதிப்பிலேயே டிஜிட்டல் ரூபாயும், சில்லறைப் பணப் பரிவர்த்தனைகளில் சோதனை ஓட்டத்தை தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின்படி, டிசம்பர் 1 முதல் 1, 2, 5, 10, 20, 50, 100, 200, 500, 2000 ரூபாய் மதிப்பிலான டிஜிட்டல் கரன்சிகள் புழக்கத்திற்கு வரவுள்ளது.
டிஜிட்டல் முறையில் e₹-R என்ற குறியீடு டிஜிட்டல் ரூபாய்க்கு வழங்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக மும்பை, டெல்லி, பெங்களூரு, புவனேஸ்வர் ஆகிய 4 நகரங்களில் நடைபெறும் சோதனை ஓட்டத்தில், எஸ்பிஐ, ஐசிஐசிஐ, யெஸ் வங்கி, ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கி ஆகிய நான்கு வங்கிகள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது விரைவில் அடுத்தடுத்த நகரங்களுக்கு விரிவு படுத்தப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.