ஜேர்மன் தூதருக்கு இந்தியா சம்மன்: விவரம் செய்திக்குள்
டெல்லி முதல்வர் கைது குறித்து ஜேர்மன் வெளியுறவுத்துறை கருத்து தெரிவித்ததற்கு இந்தியா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
டெல்லி முதல்வர் கைது குறித்து விமர்சனம்
டெல்லி முதல்வரான அரவிந்த் கேஜ்ரிவாலை இந்திய அமலாக்க இயக்குநரகம் இம்மாதம், அதாவது, மார்ச் மாதம் 21ஆம் திகதி கைது செய்தது.
புதிய மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில், ஜேர்மன் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளரிடம் தேர்தலுக்கு முன்பு அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ’இந்தியா ஒரு ஜனநாயக நாடு. நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகள் தொடர்பான தரநிலைகள் இந்த வழக்கிலும் பயன்படுத்தப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்,
குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் எந்தவொரு நபரையும் போல, கேஜ்ரிவாலுக்கும் நியாயமான விசாரணைக்கு உரிமை உண்டு’ என்றார். ஜேர்மன் செய்தித் தொடர்பாளரின் கருத்து சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கியது.
ஜேர்மன் தூதருக்கு இந்தியா சம்மன்
அதைத் தொடர்ந்து, புதுடெல்லியில் உள்ள ஜேர்மன் தூதரகத்தின் துணைத் தலைவரான George Enzweilerக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பியது. சனிக்கிழமை காலை அவர் இந்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு சென்றார்.
Photo Credit: X@ANI
அப்போது ஜேர்மன் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறிய கருத்திற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்றும் கூறியுள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுபோன்ற கருத்துகள் நமது நீதித்துறை செயல்பாட்டில் தலையிடுவதாகவும், நமது நீதித்துறையின் சுதந்திரத்தை குறைத்து மதிப்பிடுவதைப்போலவும் கருதுகிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா, சட்டத்தின் ஆட்சியுடன் கூடிய துடிப்பான மற்றும் வலுவான ஜனநாயக நாடு. ஜனநாயக நாடுகளில், அனைத்து சட்ட வழக்குகளிலும் சட்டப்படி அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும். இதில் பாரபட்சமுடைய கருத்துகள் தேவையற்றவை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |