உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் பிரபல முக்கிய அணிக்கு விசா வழங்க இந்தியா முடிவு!
உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு விசா வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் ஐசிசி டி20 உலகக் கோப்பை வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடக்கவுள்ளது. இந்த உலககோப்பை டி 20 போட்டிகளில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு இந்தியா விசா வழங்க உள்ளது.
மொத்தம் 16 அணிகள் பங்கேற்க உள்ள டி20 உலகக் கோப்பையில் 45 மேட்ச்கள் நடத்தப்பட உள்ளன. இதனிடையே இந்தியா - பாகிஸ்தான் நாடுகளிடையே நீண்ட காலமாக நிலவி வரும் எல்லை பிரச்சனை, தீவிரவாத தாக்குதல் பிரச்சனை உள்ளிட்டவை காரணமாக சுமூக உறவு இல்லை.
இரு நாடுகளுக்கிடையிலான அரசியல் பதற்றம் காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையே பல ஆண்டுகளாக இருதரப்பு கிரிக்கெட் தொடர்கள் நடத்தப்படுவதில்லை.
இதனால் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக இரு அணிகளும் ஒருவருக்கொருவர் சுற்றுப்பயணம் செய்து விளையாடாமல் வேறு வேறு நாடுகளில் நடக்கும் போட்டிகளில் மட்டுமே பங்கேற்று விளையாடி வருகின்றன.
இந்த ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெற உள்ளதால், தொடரில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு இந்தியா விசா வழங்குமா என்ற கேள்வி எழுந்தது.
பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா வழங்குவதற்கு மார்ச் இறுதிக்குள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இந்த உலகக்கோப்பை தொடரை வேறு நாட்டில் நடத்த ஐசிசியிடம் வலியுறுத்துவோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் இஷான் மானி கூறி இருந்தார்.
இந்நிலையில் பிசிசிஐ அதிகாரி ஒருவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கலந்து கொள்ள இருக்கும் அனைத்து அணி வீரர்களுக்கும் விசா வழங்கப்படும் என தகவல் தெரிவித்துள்ளார். இதன் மூலம் டி20 உலகக் கோப்பை 2021 தொடரில் கலந்து கொள்ளும் பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு இந்தியா விசா வழங்க போவது உறுதியாகியுள்ளது.