பிரித்தானியா செல்லும் இந்தியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!
இந்தியா உட்பட 4 நாடுகள் பிரித்தானியாவின் சிகப்பு பட்டியலில் இருந்து நீக்கப்படுகிறது.
பிரித்தானியாவின் சிகப்பு பட்டியலில் இருந்த இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும் கத்தார் ஆகிய 4 நாடுகள் அம்பர் பயணப் பட்டியலுக்கு மாற்றப்படுகிறது.
இந்த மாற்றம் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 8) அதிகாலை 4 மணி முதல் அமுலுக்கு வருகிறது.
இனி இந்தியா உள்ளிட்ட இந்த 4 நாடுகளில் இருந்து பிரித்தானியா வரும் பயணிகள் யாரும் தனிமைப்படுத்திக்கொள்ள தேவை இல்லை, அதற்காக 11 இரவுகளுக்கு ஹோட்டல் அறைகளுக்கு பணம் செலவழிக்க தேவை இல்லை.
அதற்கு பதிலாக முழுமையாக தடுப்பூசி போடப்பட்டதற்கான சான்றிதழ் மற்றும் பிரித்தானியாவுக்கு புறப்படுவதற்கு மூன்று நாட்களுக்குள் எடுக்கப்பட்ட கோவிட் -19 சோதனைக்கான ஆதாரத்தை வழங்கினால் போதும். மேலும் நாட்டிற்குள் நுழைந்த அடுத்த இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு சோதனையை எடுக்க வேண்டும்.
இரண்டு டோஸ் தடுப்பூசிகளை பெறாத பயணிகள் 10 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சோதனை எடுக்க வேண்டும்.
பிரித்தானியாவின் அம்பர் பயணப் பட்டியலில் இருந்த ஜேர்மனி, ஆஸ்திரியா, ஸ்லோவேனியா, ஸ்லோவாக்கியா, லாட்வியா, ருமேனியா மற்றும் நோர்வே ஆகிய 7 நாடுகள் பச்சை பட்டியலின் கீழ் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.