குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகொலை! உ.பி.யில் பயங்கரம்
இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் இரண்டு வயது பெண் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகொலை செய்யப்பட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில், கவாஜ்பூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இன்று காலை இந்த படுகொலை சம்பவம் நடந்துள்ளது. இதில் ராம் குமார் யாதவ் (55), அவரது மனைவி குசும் தேவி (52), மகள் மனிஷா (25), மருமகள் சவிதா (27), பேத்தி மீனாக்ஷி (2) ஆகியோர் கொல்லப்பட்டனர்.
மற்றொரு பேத்தி சாக்ஷி (5) உயிர் பிழைத்துள்ளார். சம்பவம் நடந்த நேரத்தில் வீட்டில் இல்லாத யாதவின் மகன் சுனில் (30), விசாரணையில் உதவி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மூத்த பொலிஸ் அதிகாரி அஜய் குமார் கூறுகையில், உடல்களை சோதனை செய்ததில் உயிரிழந்த 5 பேரின் தலையிலும் பலமாக ஐக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த கொடூரமான குற்றத்தை விசாரிக்க ஏழு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கொலையாளிகளுக்கு வழிவகுக்கும் தடயங்களை சேகரிக்க மோப்ப நாய் படை மற்றும் தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
குற்றத்திற்குப் பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட நீதிபதி சஞ்சய் குமார் காத்ரி, யாதவின் வீட்டில் தீப்பற்றியதைக் கண்ட உள்ளூர்வாசிகள் எச்சரிக்கை எழுப்பியதாக தெரிவித்தார்.
"தீ விபத்து ஏற்பட்டதாக காவல்துறைக்கு முதலில் தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறை மற்றும் தீயணைப்புப் படையினர் சென்றபோது, யாதவ் மற்றும் மற்றவர்களின் உடல்கள் வீட்டில் கண்டெடுக்கப்பட்டன. சிறுமி மற்றும் அவரது தாயின் உடல்கள் தீப்பிடித்த அறைக்கு அருகில் இருந்தன. யாதவ் மற்றும் அவரது மனைவி மூச்சுத்திணறிக் கொண்டிருந்தனர். பின்னர் அவர்களது மகளின் உடல் கண்டெடுக்கப்பட்டது," என்று மாவட்ட நீதிபதி சஞ்சய் குமார் காத்ரி,ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இந்த வழக்கு தொடர்பில் "இதுவரை எந்த பகை கோணமும் வெளியில் வரவில்லை" என்று மாவட்ட ஆட்சியர் கூறினார்.
இந்த வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்துறை மற்றும் நிர்வாக அதிகாரிகளிடம் உள்ளூர்வாசிகள் கேட்டுக்கொண்டனர்.