45 லட்சம் தடுப்பூசிகளை வீணடித்த இந்தியா! தகவல் அறியும் சட்டத்தால் தெரியவந்த அதிர்ச்சி தகவல்
இந்தியாவில் தடுப்பூசி பற்றாக்குறைக்கு மத்தியில், ஏப்ரல் 11-ஆம் திகதி வரை 44 லட்சத்திற்கும் அதிகமான கோவிட் தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டுள்ளன.
விவேக் பாண்டே என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்த மனுவுக்கு பதிலாக இந்த அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு ஏப்ரல் 11-ஆம் திகதி வரை இந்தியாவின் பல மாநிலங்களில் பயன்படுத்தப்பட்ட மொத்த 10.34 கோடி டோஸ்களில் மொத்தம் 44.78 லட்சம் டோஸ்கள் வீணாகிவிட்டதாக விவேக் பாண்டே தாக்கல் செய்த தகவல் அறியும் உரிமை அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த தரவுகளின்படி, தமிழ்நாட்டில் தான் மிக அதிகமான டோஸ்கள் வீணானது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் 100 தடுப்பூசி டோஸ்களில் 12 டோஸ்கள் வீணடிக்கப்படுகின்றன.
அதைத் தொடர்ந்து ஹரியானா மாநிலம் 100 மருந்துகளில் 9 டோஸ்கள் வீணடிக்கிறது.
இதற்கிடையில், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் 100-க்கு 8 மருந்துகள் வீணடிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் கேரளா, மேற்கு வங்கம், இமாச்சலப் பிரதேசம், மிசோரம், கோவா, டாமன் மற்றும் டியு, அந்தமான் & நிக்கோபார் தீவு மற்றும் லட்சத்தீவு ஆகிய மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் பூஜ்ஜிய அளவிலான தடுப்பூசி வீணாவதைக் காட்டியுள்ளன.
சுமார் 99 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு தடுப்பூசி போட்டுள்ள மகாராஷ்டிராவில் சுமார் 3.2 சதவீதம் (3.56 லட்சம்) மட்டுமே வீணடிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ராஜஸ்தானில் கிட்டத்தட்ட 6 சதவீதம், குஜராத்தில் சுமார் 3.8 சதவீதம் மற்றும் உத்தரபிரதேச மாநிலத்தில் 5 சதவீதம் வீணடிக்கப்பட்டுள்ளது.