37-வது ஓவருக்குள்ளே இலங்கையை ஊதித்தள்ளிய இந்தியா! வெளுத்து வாங்கிய இஷான்-ப்ரித்வி ஷா: அபார வெற்றி
இலங்கை அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
கோஹ்லி தலைமையிலான அனுபவமிக்க வீரர்கள், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளதால், இந்தியாவின் இளம் அணியை, டிராவிட் வழிநடத்துகிறார்.
இந்த அணிக்கு ஷிகார் தவான் தலைமை தாங்குகிறார். இந்நிலையில், இரு அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி, இன்று கொழும்பு பிரேமதாஸா ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
அதன் படி முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 262 ஓட்டங்கள் எடுத்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக சாமிகா கருணரத்னே 43 ஓட்டங்களும், தசுன் சனக்கா 39 ஓட்டங்களும் எடுத்தனர்.
இந்திய அணியில் குல்தீப் யாதவ், யுவேந்திர சஹால், மற்றும் தீபக் சஹார் அதிகபட்சமாக இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து 263 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்க வீரர்களான ஷிகார் தவான்-ப்ரித்வி ஷா ஜோடி அருமையான துவக்கம் கொடுத்தது.
இதில் ப்ரித்வி ஷா இலங்கை அணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்கினார். 24 பந்தில் 43 ஓட்டங்கள் குவித்த அவர், தனஞ்சிய டி சில்வா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
இவரைத் தொடர்ந்து வந்த இஷான் கிஷான் தான் சந்தித்த முதல் பந்திலே சிக்ஸர் அடித்து ரன் வேட்டையை துவங்கினார். ஒரு புறம் ஷிகார் தவான் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபுறம் இஷான் கிஷான் அதிரடி ஆட்டத்தி வெளிப்படுத்த, இந்திய அணியின் ரன் விகிதம் ஜெட் வேகத்தில் எகிறியது.
இதில், அரைசதம் அடித்த இஷான் கிஷான் 42 பந்தில் 59 ஓட்டங்கள் எடுத்த நிலையில் பவுலியன் திரும்பினார். அடுத்து வந்த மனீஷ்பாண்டே 26 ஓட்டங்களில் வெளியேற, ஷிகார் தவான் மற்றும் சூர்யகுமார் யாதவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 36. 4-வது பந்திலே 263 ஓட்டங்களை எடுத்தனர்.
இதன் மூலம் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.
கடைசி வரை ஆட்டமிழக்காமல் ஷிகார் தவான் அதிகபட்சமாக 86 ஓட்டங்கள் குவித்தார். ஆட்ட நாயகன் விருது ப்ரித்வி ஷாவுக்கு கொடுக்கப்பட்டது.