நியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்த இந்தியா! கிளீன் ஸ்வீப்: ரோகித்சர்மா படை அபார வெற்றி
நியூசிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 73 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, தொடரை 3-0 என்று கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. அதன் படி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 184 ஓட்டங்கள் எடுத்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித்சர்மா அரைசதம் அடித்து 56 ஓட்டங்களும், இதைத் தொடர்ந்து இஷான் கிஷான்(29), ஸ்ரேயாஸ் அய்யர்(25), வெங்கடேஷ் அய்யர்(20) என அடிக்க, கடைசி கட்டத்தில் வந்த தீபக் சஹார் தன் பங்கிற்கு 8 பந்தில் 21 ஓட்டங்கள் குவித்தார்.
நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக சுழற்பந்து வீச்சாளர் மிட்சல் சாண்ட்னர் 4 ஓவர்கள் வீசி, 27 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
185 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. துவக்க வீரர் டேரில் மிட்சல் 5 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அக்சர் பட்டேல் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
இவரைத் தொடர்ந்து வந்த மார்க் சாப்பம்(0), கிளன் பிலிப்ஸ் ஆகியோரையும் அக்சர் பட்டேல் டக் அவுட் ஆகி வெளியேற, நியூசிலாந்து அணி ஒரு கட்டத்தில், 4.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 30 ஓட்டங்கள் எடுத்து தடுமாறிக் கொண்டிருந்தது.
ஒரு புறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுபுறம் துவக்க வீரரான மார்டின் கப்டில் இந்திய அணியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர் கொண்டார். 36 பந்தில் 51 ஓட்டங்கள் எடுத்த அவர், யுவேந்திர சஹால் பந்து வீச்சில் ஆட்டமிழக்க, ஆட்டம் அப்படியே இந்தியா பக்கம் திரும்பியது.
இறுதியாக நியூசிலாந்து அணி 17.2 ஓவரிலே 111 ஓட்டங்கள் எடுத்த நிலையில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 73 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-0 என்று கைப்பற்றி அசத்தியுள்ளது.
கோலி டி20 கேப்டன் பதவில் இருந்து விலகிய பின் ரோகித் கேப்டனாகவும், ராகுல் டிராவிட் புதிய பயிற்சியாளராக நடைபெற்ற முதல் தொடரை இந்திய அணி வெற்றியுடன் ஆரம்பித்துள்ளதால், வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.