நியூசிலாந்து அணியை பழி தீர்த்த இந்தியா! ரோகித்-கே.எல்.ராகுல் ருத்ரதாண்டவம்: தொடரை வென்று அபாரம்
நியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கிடையே நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இதையடுத்து இன்று இரண்டாவது டி20 போட்டி ஜார்கண்டில் நடைபெற்றது. அதன் படி முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 153 ஓட்டங்கள் எடுத்தது.
நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக மார்ட்டின் கப்டில் மற்றும் டேரில் மிட்சல் 31 ஓட்டங்களும், கிளன் பிலிப்ஸ் 34 ஓட்டங்களும் எடுத்தனர். இந்திய அணியில் ஹர்சல் பட்டேல் 4 ஓவர் வீசி 25 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து 154 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு, துவக்க வீரர்களான ரோகித்சர்மா மற்றும் கே.எல்.ராகுல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 117 ஓட்டங்கள் குவித்த நிலையில், கே.எல்.ராகுல் 65 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆகினார்.
இவரைத் தொடர்ந்து மற்றொரு துவக்க வீரரான ரோகித் சர்மா 55 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த சூர்யகுமார் யாதவும் 1 ஓட்டத்தில் நடையை கட்ட, வெங்கடேஷ் அய்யர் மற்றும் ரிஷப் பாண்ட் ஜோடி இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது.
இறுதியாக இந்திய அணி 17.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 155 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2-0 என்று முன்னிலையுடன் தொடரைக் கைப்பற்றி அசத்தியுள்ளது.
மேலும், சமீபத்தில் நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை டி20 தொடரில் நியூசிலாந்து அணிக்கெதிரான தோல்விக்கும், இந்திய அணி பழி தீர்த்துள்ளது.