இலங்கைக்கு 6750 கோடி ரூபாய் கடன் வழங்க இந்தியா முடிவு? வெளியான தகவல்
இலங்கைக்கு 6,750 கோடி ரூபாய் கடன் உதவியாக இந்தியா இந்த மாதம் வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலுக்கிடையே இலங்கை கடும் நிதி நெருக்கடியில் தவித்து வருகிறது. இதன் காரணமாக, இந்தியாவிடம் அந்த நாடு உணவுப்பொருட்களும், மருந்து பொருட்களும் வாங்குவதற்கு 1 பில்லியன் டொலர் (சுமார் 7,500 கோடி ரூபாய்) கடன் உதவி கேட்டுள்ளது.
ஆனால் இதற்கான ஆவணங்களை தயார் செய்வதற்கு அதிக காலம் பிடிக்கும் என தகவல்கள் வெளியாகின. இது தவிர்த்து 900 மில்லியன் டொலர் (சுமார்6,750 கோடி ரூபாய்) கடன் உதவியையும், இந்தியாவிடம் இலங்கை நாடி உள்ளது.
இது 2 கடன்களாக அமைகின்றன. அதில் ஒன்றாக 500 மில்லியன் டொலர் கடன் உதவி, கச்சா எண்ணெய் வாங்குவதற்கான கடனாகவும் கேட்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இலங்கை நிதி மந்திரி பசில் ராஜபக்சே வரும் 10-ஆம் திகதி இரண்டாவது முறையாக டெல்லி வரவுள்ளார்.
இந்த நிலையில், இலங்கைக்கு இந்தியா இந்த மாதம் 900 மில்லியன் டொலர் (சுமார் 6,750 கோடி ரூபாய்) கடன் உதவியை வழங்க தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.