முதல் முறையாக இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட விமானந்தாங்கி போர்க்கப்பல்! ‘விக்ராந்த்’ சோதனை ஓட்டம் தொடங்கியது
இந்தியாவில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட விக்ராந்த் விமானந்தாங்கி போர்க்கப்பலின் சோதனை ஓட்டம் நேற்று தொடங்கியது.
உலக அளவில் சிறந்த கடற்படையை கொண்டிருக்கும் இந்தியாவிடம் ஒரே விமானந்தாங்கி போர்க்கப்பலாக, ரஷியாவிடம் இருந்து வாங்கப்பட்ட ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா மட்டுமே உள்ளது.
எனவே உள்நாட்டிலேயே நவீன விமானந்தாங்கி போர்க்கப்பல் ஒன்றை வடிவமைக்கும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வந்தது.
சுமார் ரூ.23,000 கோடியில் கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டு வந்த விமானந்தாங்கி போர்க்கப்பலின் பணிகள் ஏற்கனவே முடிந்து சோதனைக்கு தயாராகி வந்தது.
இங்கிலாந்திடம் இருந்து வாங்கப்பட்ட இந்தியாவின் முதல் விமானந்தாங்கி போர்க்கப்பலுக்கு சூட்டப்பட்டிருந்த ‘விக்ராந்த்’ (1997-ம் ஆண்டிலேயே பணியில் இருந்து விடுவிக்கப்பட்டது) என்ற பெயரையே இந்த கப்பலுக்கும் சூட்டப்பட்டு உள்ளது.
நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த இந்த உள்நாட்டு விமானந்தாங்கி போர்க்கப்பலான (IAC) விக்ராந்தின் கடல் சோதனை ஓட்டம் நேற்று தொடங்கி உள்ளது.
India's sole carrier right now, INS Vikramaditya is of Russian origin.
— Krishn Kaushik (@Krishn_) August 4, 2021
Video shared in the previous tweet in from the @indiannavy. Here are some more images (credit: Navy) from today of INS Vikrant, as it will called. pic.twitter.com/hAP1oXsd1F
முதலாவது விக்ராந்த் போர்க்கப்பல் கடந்த 1971-ம் ஆண்டு வங்க பிரிவினைப்போரில் ஈட்டித்தந்த பலன்களின் 50-வது ஆண்டு நினைவாக இந்த சோதனை ஓட்டம் தொடங்கி இருக்கிறது.
இந்த கடல் சோதனை மற்றும் விமான போக்குவரத்து சோதனை அனைத்தும் முடித்து அடுத்த ஆண்டு பிற்பகுதியில் இந்த கப்பல் கடற்படையில் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விக்ராந்த் விமானந்தாங்கி போர்க்கப்பலின் கடல் சோதனை தொடங்கியிருப்பதன் மூலம், உலக அளவில் விமானந்தாங்கி கப்பல் கட்டும் திறன் கொண்ட குறிப்பிட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்திருப்பதாக கடற்படை பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது.
40,000 டன் எடை கொண்ட இந்த மிதக்கும் கடற்படை தளம், 262 மீட்டர் நீளமும், 62 மீட்டர் அகலமும் கொண்டது. இதில் 30 தாக்குதல் ரக விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை வைத்திருக்க முடியும்.
அந்தவகையில் MIG-29K ரக தாக்குதல் ரக விமானங்கள் மற்றும் KA-31 ரக ஹெலிகாப்டர்களையும் இந்த கப்பல் கொண்டிருக்கும்.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீன போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களின் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில், விக்ராந்த் விமானந்தாங்கி கப்பலின் கடல் சோதனை ஓட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.