லண்டனில் இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த இளைஞர்களை தாக்கிய கும்பல்
லண்டனில், தங்கள் நண்பர்கள் கிரிக்கெட் விளையாடுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் ஒரு கூட்டத்தால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த இளைஞர்களை தாக்கிய கும்பல்
மே மாதம் 30ஆம் திகதி, பல்கலையில் பயிலும் ரவி என்னும் இளைஞரும் அவரது நண்பரான யாஷ் என்பவரும் லண்டன் Harrowவிலுள்ள விளையாட்டு மைதானம் ஒன்றிற்குச் சென்றுள்ளார்கள்.
பின்னர் அவர்களுடன் அவர்களுடைய நண்பரான நீல் என்பவரும் சேர்ந்துகொள்ள, மேலும் சில நண்பர்களுமான சிறிது நேரம் கிரிக்கெட் விளையாடியுள்ளார்கள்.
ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிடலாம் என முடிவு செய்த மூவரும் ஒரு கடைக்குச் செல்ல முடிவு செய்ய, கடைக்குச் செல்லும் முன் விளையாடிக் கொண்டிருந்த தங்கள் நண்பர்களை திரும்பிப் பார்த்துள்ளார்கள்.
அப்போது அங்கே ஹிஜாப் அணிந்த சில பெண்கள், சிறுவர்கள் மற்றும் மூன்று ஆண்கள் கொண்ட ஒரு இஸ்லாமியக் குடும்பம் நின்றுகொண்டிருந்திருக்கிறது.
இவர்கள் தங்கள் பக்கம் பார்ப்பதாக நினைத்த அந்த இஸ்லாமியக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் வந்து, இந்த நண்பர்களிடம் என்ன பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள் என கேட்டிருக்கிறார்.
நாங்கள் கிரிக்கெட் விளையாடும் எங்கள் நண்பர்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம், உங்களைப் பார்ப்பதாக நீங்கள் நினைத்தால், மன்னிக்கவும், நாங்கள் உங்களைப் பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்கள் அந்த நண்பர்கள் மூவரும்.
இப்படியே இந்த விடயம் சிறிது நேரம் தொடர, பின்னர் ஒரு பூங்காவிலுள்ள ஒரு பெஞ்சில் சென்று அமர்ந்துள்ளார்கள் அந்த மூன்று இளைஞர்களும்.
அப்போது மீண்டும் அந்த இஸ்லாமியக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு ஆண், மேலும் இரண்டு ஆண்களுடன் அங்கு வந்துள்ளார். நீங்கள் யார், இந்தியர்களா, இலங்கையர்களா என அவர்கள் கேட்க, இவர்கள் ஆம் என்று கூறியுள்ளார்கள்.
அதைத் தொடர்ந்து, ரவி, யாஷ் மற்றும் நீல் ஆகிய மூவரையும் அந்த ஆண்கள் சரமாரியாகத் தாக்கியுள்ளார்கள். தாக்குதலில் பலத்த காயமடைந்த ரவியும் யாஷும் சுயநினைவிழந்துள்ளார்கள்.
யாரோ பொலிசாரை அழைக்க, ரவி மட்டும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். மற்றவர்கள் தாங்களாகவே மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்கள்.
தாங்கள் இந்து மதம் சார்ந்த அடையாளங்களை கையில் அணிந்திருந்ததைக் கண்ட அவர்கள் தங்களைத் தாக்கியதாக ரவியும் அவரது நண்பர்களும் தெரிவித்துள்ளார்கள்.
ஆனால், இது இன அடிப்படையிலான தாக்குதல் என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை என்று கூறியுள்ள பொலிசார், விசாரணை தொடர்வதாக தெரிவித்துள்ளார்கள்.
தாக்குதல் நடந்து இத்தனை நாட்கள் ஆகியும், இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |