இனி அமைதியா இருந்தா வேலைக்கு ஆகாது! நேரடியாக களமிறங்கிய இந்திய பயிற்சியாளர் ராகுல் டிராவிட்
இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்கள் சிறப்பாக செயல்படுவதற்காக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஒரு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கவுள்ளது. சமீப காலமாக மோசமாக விளையாடும் சீனியர் வீரர்கள் அஜிங்கியா ரகானே மற்றும் சட்டீஸ்வர் புஜாரா ஆகியோரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை வலுத்தது.
கடந்த முதல் டெஸ்டில் கூட இருவரும் மோசமான முறையில் அவுட்டாகி வெளியேறினர். டிராவிட் வைத்த நம்பிக்கை அனைவரும் விமர்சித்து வரும் போதும், இவர்களின் மீது இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார்.
அதற்கு காரணம் அவர்களின் அனுபவம் தான். இதுகுறித்து பேசியிருந்த அவர், மிக கடினமான சூழல்களில் எல்லாம் இந்திய அணியை காப்பாற்றிய அனுபவம் அவர்களுக்கு உள்ளது. சிறந்த வீரருக்கு ஒரே ஒரு நல்ல இன்னிங்ஸ் போதும், அவர்களின் ஃபார்மை மீண்டும் கொண்டு வர என குறிப்பிட்டிருந்தார். அவரின் வார்த்தைகள் பொய்யாகிவிடக் கூடாது என்பதற்காக தற்போது நேரடியாக களத்தில் குதித்துள்ளார். மும்பையில் பெய்து வரும் மழையின் காரணமாக இந்திய அணியின் பயிற்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தன.
ஆனால் சீனியர் வீரர்களுக்காக முற்றிலும் மூடப்பட்ட வலைப்பயிற்சி முகாம் ஒன்றுக்கு டிராவிட் ஏற்பாடு செய்துள்ளார். அதில் ஒவ்வொரு பந்தையும் எப்படி எதிர்கொள்ள வேண்டும், எங்கு தவறு செய்கிறார்கள் என்பதை நிமிடத்திற்கு நிமிடம் தெளிவுப்படுத்தி வருகிறார்.
ரகானே, புஜாராவுடன் இணைந்து விராட் கோலியும் டிராவிட்டின் மேற்பார்வையில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். ஏனென்றால் விராட் கோலி நீண்ட நாட்களாக ஒரு சதம் கூட அடிக்காமல் இருக்கிறார்.
எனவே டிராவிட் தற்போது நேரடியாக களமிறங்கி கொடுத்துள்ள பயிற்சியின் பலனாக 2வது டெஸ்டில் அவர்கள் மூவருமே தங்களது முழு திறமையை வெளிப்படுத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.