இந்திய ரூபாய் நோட்டுகளில் காந்தி படம் மாற்றப்பட்டு இவர்களின் படம் இடம்பெறுமா? அதிகாரபூர்வ தகவல்
இந்திய ரூபாய் நோட்டுகளில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படாது என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் அனைத்து மதிப்புள்ள ரூபாய் தாள்களிலும் மகாத்மா காந்தி அவர்களின் படம் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கி மற்றும் செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (SPMCIL) ஆகியவை மகாத்மா காந்தி, ரவீந்திரநாத் தாகூர் மற்றும் ஏபிஜே அப்துல் கலாம் ஆகியோரின் இரண்டு செட் மாதிரிகளை ஐஐடி-டெல்லி எமரிட்டஸ் பேராசிரியர் திலிப் டி ஷஹானிக்கு அனுப்பியதாக தகவல் வெளியானது.
இதன் காரணமாக இந்திய ரிசர்வ் வங்கி இனி புதிதாக அச்சிடவுள்ள ரூபாய் தாள்களில் ரவீந்திரநாத் தாகூர் மற்றும் ஏபிஜெ அப்துல் கலாம் ஆகியோரின் படங்களைப் பயன்படுத்துவது குறித்து பரிசீலனை செய்வதாக தகவல் பரவியது.
இந்நிலையில் இது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரபூர்வ விளக்கம் அளித்துள்ளது.
அதன்படி, இந்திய ரூபாய் நோட்டுகளில் எந்த மாற்றமும் செய்யப்பட மாட்டாது. ரூபாய் நோட்டுக்களில் காந்தியின் படம் மாற்றப்படும் என்ற செய்தியில் உண்மை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.