அன்று போல் இன்றும் நடக்குதே! இந்தியா தோற்றுவிடுமோ? மழையால் பயத்தில் இந்திய ரசிகர்கள்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக தடைபட்ட நிலையில், இந்திய ரசிகர்கள் பழைய ஆட்டங்களை இப்போது பதிவிட்டு வருகின்றனர்.
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப் போட்டி இன்று இங்கிலாந்தின் சவுத்தாம்டனில் துவங்கியது.
ஆனால், ஆட்டம் துவங்குவதற்கு முன், அதாவது டாஸ் போட கூட வாய்ப்பு தராமல் தொடர்ந்து மழை பெய்து வருவதால், முதல் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதே போன்று தான் கடந்த 2019-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டி மழையின் காரணமாக தாமதாக இரண்டு நாட்கள் விளையாடப்பட்டது.
முதலில் ஆடிய நியூஸிலாந்து அணி 239 ஓட்டங்கள் எடுத்திருந்தது. மழையால் ஆட்டம் தடைப்பட, அடுத்த நாள் இந்திய அணி தனது ஆட்டத்தைத் தொடங்கியது. இதில் 5 ஓட்டங்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து பரிதாபமான நிலையில் இருந்த அணியை ரவீந்திர ஜடேஜா மீட்டார்.
ஆனால் 59 பந்துகளீல் அவர் அடித்த 77 ஓட்டங்கள் வெற்றிக்குப் போதுமானதாக இல்லை. இறுதியில் இந்திய அணி 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இது போன்றே தற்போதும், இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான டெஸ்ட் போட்டி மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதால், அன்று போன்றே இந்த போட்டியும் ஆகிவிடுமோ என்று இந்திய ரசிகர்கள் பயப்படுகின்றனர். இன்னும் நான்கு நாட்கள் மீதம் இருந்தாலும், மூன்று நாட்களிலே முடிந்த டெஸ்ட் போட்டிகள் எல்லாம் உள்ளது குறிப்பிடத்தக்கது.