சாலை விபத்துக்களை குறைக்க வாகனங்களில் கட்டாயமாக உள்ள V2V தொழில்நுட்பம்
சாலை விபத்தை குறைக்க வாகனங்களில் V2V தொழில்நுட்பத்தை கட்டாயம் ஆக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
வாகனங்களில் கட்டாயம் ஆக உள்ள V2V
இந்தியாவில், 2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் 5.13 லட்சத்திற்கும் அதிகமான சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன. இதில், 1,83,382 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாட்டிலேயே அதிகபட்சமாக, தமிழ்நாட்டில் 71,387 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன.
இந்நிலையில், சாலை விபத்துகளை தடுக்க அடுத்த ஆண்டு முதல் வாகனங்களில் V2V தொழில்நுட்பத்தை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Vehicle-to-Vehicle (V2V) என்பது வாகனங்கள் ஒன்றுக்கொன்று தகவல்களை தானாக பரிமாறிக்கொள்ளும் தொழில்நுட்பம் ஆகும்.
இதன் மூலம், அருகிலுள்ள வாகனத்தின் வேகம், பயணிக்கும் திசை, கார் பாதை மாறுவது, திடீர் பிரேக்கிங் எச்சரிக்கை, வாகனங்களுக்கு இடையே உள்ள தூரம் ஓட்டுனருக்கு முன்கூட்டியே கிடைக்கும்.
வயர்லெஸ் தொழில்நுட்பத்தின் மூலம் செயல்படும் இவை, 5.875 GHz முதல் 5.905 GHz அலைவரிசையில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் விபத்துக்களை குறைத்து சாலை பாதுகாப்பை மேற்படுத்தலாம் என்ற நோக்கத்தில் இது குறித்து வரைவு விதியை வெளியிட்டுள்ள மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் பொதுமக்கள் தொழில்நுட்ப நிபுணர்களிடமிருந்து கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை வரவேற்றுள்ளது.
இந்த வரைவின்படி, அக்டோபர் 1, 2027 முதல் தயாரிக்கப்படும் L, M மற்றும் N வகை புதிய வாகனங்களில் V2V தகவல் தொடர்பு அமைப்பு நிறுவப்பட்டால், அது AIS-230 தரநிலைக்கு இணங்க இருக்க வேண்டும்.
L வகை – இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்கள்
M வகை – கார்கள், டாக்சிகள், பேருந்துகள் போன்ற பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள்
N பிரிவு – சரக்கு ஏற்றிச் செல்லும் டிரக்குகள் மற்றும் இலகுரக வர்த்தக வாகனங்கள்
இதைத் தொடர்ந்து, அக்டோபர் 1, 2028 முதல் இந்த வகைகளின் அனைத்து புதிய வாகனங்களிலும் இந்தத் தொழில்நுட்பம் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று அரசாங்கம் முன்மொழிகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |