வட அயர்லாந்து வன்முறை: ஆர்ப்பாட்டக்காரர்களிடம் சிக்கிய இந்தியர்
வட அயர்லாந்தின் பெல்ஃபாஸ்ட் நகரில் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக வெடித்துள்ள வன்முறையைத் தொடர்ந்து புலம்பெயர்ந்தோரின் வீடுகள், கார்களுக்கு தீவைக்கப்பட்ட விடயம் அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில், அங்கு வாழ்ந்துவரும் இந்தியர் ஒருவர் சந்தித்த திகில் அனுபவம் குறித்து சமூக ஊடகம் ஒன்றில் பகிர்ந்துள்ளார் அவரது அயலகத்தார் ஒருவர்.
வட அயர்லாந்து வன்முறை
சூடான் நாட்டைச் சேர்ந்த 30 வயது நபர் ஒருவர் பிரித்தானியாவில் புகலிடம் கோரிய நிலையில், பிரித்தானியாவில் தங்கியிருக்க அவருக்கு அனுமதியளிக்கப்பட்டது.

ஆனால், அவர் திங்கட்கிழமை இரவு Belfast நகரில் 40 வயது மதிக்கத்தக்க பிரித்தானியர் ஒருவரை கத்தியால் தாக்கியுள்ளார். கொடூரமாக தாக்கப்பட்ட ஸ்டீஃபன் (Stephen Ogilvie) என்னும் அந்த நபருக்கு, முதுகு, கழுத்து மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர் தனது இடது கண் பார்வையை இழந்துவிட்டார்.
தாக்குதல் நடத்திய ஹாடி (Hadi Alodid) என்னும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கொலைமுயற்சிக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், புலம்பெயர்ந்தோர் ஒருவர் பிரித்தானியர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான செய்தியும், அது தொடர்பான காட்சிகளும் சமூக ஊடகங்களில் பரவ, பெல்ஃபாஸ்ட் நகரில் கலவரம் வெடித்தது.
முகமூடி அணிந்த கும்பல்கள் புலம்பெயர்ந்தோர் வாழும் வீடுகளுக்கும் அவர்களுடைய வாகனங்களுக்கும் தீவைக்கத் துவங்கின.
அதைத் தொடர்ந்து, பெல்ஃபாஸ்டில் வாழும் புலம்பெயர்ந்தோர் அச்சத்தில் ஆழ்ந்துள்ளார்கள். அவர்கள் அச்சத்தை நியாயப்படுத்தும் வகையில் மேலும் சில சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

ஆம், பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த 40 வயது மதிக்கத்தக்க இந்தியர் ஒருவரை ஆர்ப்பாட்டக்கார்கள் சிலர் துரத்தியுள்ளார்கள்.
உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அவர் தன் வீட்டை நோக்கி ஓடிவர, அவரது பக்கத்து வீட்டில் வாழும் பிரித்தானியர் ஒருவர் அவருக்கு ஆதரவாக வரவும், அவரைத் துரத்தியவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளார்கள்.
முதியோர் இல்லம் ஒன்றில் வேலை செய்யும் அந்த இந்தியர் பயந்து நடுங்கியபடி ஓடிவந்ததை தான் கண்டதாக தெரிவித்துள்ள அந்த பிரித்தானியர், அவரைத் துரத்தியவர்களைக் கண்டு தான் கடும் கோபமடைந்ததாகவும் தெரிவிக்கிறார்.

இந்த தகவலை அந்த பிரித்தானியரின் தந்தையோ தாயோ சமூக ஊடகம் ஒன்றில் வெளியிட, பலரும் அவருக்கு நன்றி தெரிவித்துவருகிறார்கள். நல்ல மகனைப் பெற்றெடுத்துள்ளீர்கள் என்கிறார் ஒருவர். இதெல்லாம் சீக்கிரம் முடிவுக்கு வந்துவிடும் என நம்புகிறேன் என்கிறார் மற்றொருவர்.
இதற்கிடையில், வட அயர்லாந்தில் வாழும் இந்தியர்கள் சிலர் இந்தியாவுக்கே திரும்பிவிடலாமா என்பது குறித்து ஆலோசித்துவருவதாக செய்திகள் வெளியானவண்ணம் உள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |