ஃப்ரிட்ஜுக்குள் இளம்பெண்ணின் உடல்: திடுக் பின்னணி
காதலியைக் கொலை செய்து அவரது உடல் பாகங்களை ஃப்ரிட்ஜில் அடைத்த நபர் ஒருவர், பொலிசில் சரணடைந்துள்ளார்.
ஃப்ரிட்ஜுக்குள் இளம்பெண்ணின் உடல்
இந்தியாவின் ஆந்திரப்பிரதேசத்திலுள்ள விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் மௌனிகா (29). ராஜம் என்னுமிடத்தில் வாழ்ந்துவரும் Ch ரவீந்த்ரா (35) என்னும் நபருக்கும் மௌனிகாவுக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது.

இந்திய கடற்படையில் டெக்னீஷியனாக பணி புரிந்துவரும் ரவீந்த்ரா, தன் மனைவி அவரது தாய் வீட்டுக்குச் சென்றிருந்த நேரத்தில், மௌனிகாவை தன் வீட்டுக்கு வரவழைத்துள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம், அவர்கள் இருவரும் ரவீந்த்ரா வீட்டில் பல மணி நேரம் சேர்ந்து செலவிட்ட நிலையில், எதிர்பாராதவிதமாக இருவருக்கும் இடையில் ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஆத்திரமடைந்த ரவீந்த்ரா, மௌனிகாவைக் கத்தியால் குத்திக் கொன்றுவிட்டார்.
பின்னர், மௌனிகாவின் உடலை துண்டு துண்டாக வெட்டிய ரவீந்த்ரா, சில பாகங்களை தன் வீட்டிலுள்ள ஃப்ரிட்ஜில் வைத்துள்ளார். சில பாகங்களை பைகளில் அடைத்து வெவ்வேறு இடங்களில் வீசியுள்ளார்.
பின்னர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, அருகிலுள்ள பொலிஸ் நிலையம் சென்று சரணடைந்ததுடன், தான் மௌனிகாவை கொலை செய்ததையும் ஒப்புக்கொண்டுள்ளார்.
அதைத்தொடர்ந்து அவர் அளித்த விவரங்களின்பேரில், அவரது வீட்டிலிருந்த மௌனிகாவின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அவர் பல்வேறு இடங்களில் வீசிய மௌனிகாவின் உடல் பாகங்களும் மீட்கப்பட்டுள்ளன. ஆனால், அவரது தலை மட்டும் கிடைக்கவில்லை.
பொலிசார் ரவீந்த்ரா மீது வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், சிறப்பு பொலிஸ் படை ஒன்று மௌனிகாவின் தலையைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |