பிரித்தானியாவில் இந்திய வம்சாவளி நபருக்கு நேர்ந்த பரிதாபம்! மக்கள் உதவியை நாடும் பொலிஸார்
பிரித்தானியாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் காருடன் கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் கிழக்கு நகரமான Leicester காவல்துறையினர், கடந்த திங்கட்கிழமை அதிகாலை 3 மணியளவில் பிரைட்டன் சாலையில் ஒரு சிகப்பு நிற கார் ஒன்று தாறுமாறாக சென்றதை கண்டனர்.
பின்னர் அந்த காரை விரட்டிப் பிடிக்க முயற்சித்தபோது, அதிலிருந்து ஒரு 25 வயது மிக்க இளைஞர் இறங்கி தப்பியோட முயற்சித்தார். ஆனால் அவர் சிறிது தூரத்தில் கைது செய்யப்பட்டார்.
அந்த காரில் ஒரு இந்திய வம்சாவளி நபர் கடுமையான காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததைப் பார்த்த பொலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.
அவர் விரைவாக Queen’s Medical Centre மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், மருத்துவர்கள் நீண்டநேரம் போராடியும் 8 மணியளவில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பிரேத பரிசோதனையில் அவரது தலை மற்றும் மார்பில் குறிப்பிடத்தக்க காயங்கள் ஏற்பட்டதால் அவர் இறந்தார் என்பது தெரியவந்தது.
விசாரணையில், பலியான இந்திய வம்சாவளி நபர் ஆண்டி என்றும் அழைக்கப்படும் ஆனந்த் பர்மர் (47) என அடையாளம் காணப்பட்டார். அவர் வாகனத்தை கடத்தி திருட முயற்சித்த நபரால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
ஈஸ்ட் மிட்லாண்ட்ஸ் சிறப்பு செயல்பாட்டு பிரிவு (EMSOU) முக்கிய குற்றக் குழு தலைமையிலான விசாரணை தொடங்கியது. இந்த சம்பவம் தொடர்பாக திங்களன்று சந்தேகத்தின் பேரில் Leicester-ல் 34 வயதான மற்றோரு நபர் கைது செய்யப்பட்டார்.
மேலும், கொலை சந்தேகத்தின் பேரில் Thurmaston-ல் 40 வயது பெண் கைது செய்யப்பட்டார். பின்னர், ஒரு குற்றவாளிக்கு உதவி செய்த சந்தேகத்தின் பேரில் Leicester-ல் 44 மற்றும் 34 வயதுடைய இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் "தற்போது ஐந்து பேர் காவலில் இருக்கும் நிலையில், எங்கள் விசாரணை தொடர்கிறது, மேலும் அவரது மரணத்திற்கு யார் காரணம் என்பதைக் கண்டுபிடிக்க பாதிக்கப்பட்டவரின் அன்புக்குரியவர்களுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்" என்று துப்பறியும் தலைமை ஆய்வாளர் Tony Yarwood கூறினார்.
அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர், இந்த சம்பவம் தொடர்பான தகவல் உள்ள எவரும் முன்வருமாறு பொலிஸார் கோரிக்கை வைத்துள்ளனர்.
எவிங்டன் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை அதிகாலை வரை சிவப்பு Vauxhall Astra காரை கண்ட எவரும் தங்களுக்கு தெரிந்த தகவலை தெரிவிக்குமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.