அமெரிக்காவில் பொலிசாரால் கார் மோதிக் கொல்லப்பட்ட இந்திய மாணவி: பல்கலை எடுத்துள்ள முடிவு
அமெரிக்காவில், சாலையைக் கடக்கும்போது பொலிஸ் கார் ஒன்று மோதியதில் தூக்கி வீசப்பட்ட இந்திய மாணவி ஒருவர் உயிரிழந்தார்.
அவருக்கு, முதுகலைப்பட்டம் அளிப்பது என அவர் கல்வி பயின்றுவந்த பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண்
இந்தியாவின் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜானவி (Jaahnavi Kandula, 23). அமெரிக்காவில் கல்வி பயின்று வரும் ஜானவி, Seattle நகரில் சாலை ஒன்றைக் கடந்துகொண்டிருக்கும்போது, வேகமாக வந்த பொலிஸ் கார் ஒன்று அவர் மீது மோதியுள்ளது.
மணிக்கு 119 கிலோமீற்றர் வேகத்தில் வந்த அந்த கார் மோதியதில், தூக்கி வீசப்பட்ட அந்த இளம்பெண், பரிதாபமாக பலியாகியுள்ளார்.
உருவாகியுள்ள சர்ச்சை
இந்நிலையில், அந்தக் காரிலிருந்த பொலிசார், அந்த இளம்பெண்ணைக் கொன்றுவிட்டு, அதைக் குறித்து சற்றும் வருத்தப்படாமல், அவரை கேலி செய்து சிரிக்கும் காட்சி ஒன்று வெளியாகி சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
காரை ஓட்டியவர் Kevin Dave என்னும் பொலிசார். அவர் ஜானவி மீது காரை மோதியதைக் குறித்து, அவருடன் அதே காரில் பயணித்த பொலிஸ் யூனியனைச் சேர்ந்தவரான Daniel Auderer என்பவர் தனது மேலதிகாரிக்கு தகவல் கொடுத்துள்ளார். அப்போது தனது சட்டையிலிருந்த கமெராவை அணைக்க மறந்துவிட்டிருக்கிறார்.
அப்போது, அவள் ஒன்றும் 40 அடி தூரமெல்லாம் தூக்கி வீசப்பட்டது போலத் தெரியவில்லை, ஆனாலும், அவள் செத்துவிட்டாள் என்று கூறுகிறார் அவர். சொல்லிவிட்டு, அவர் சிரிப்பதை வெளியாகியுள்ள வீடியோவில் கேட்கலாம்.
அதைத் தொடர்ந்து, அவள் ஒரு சாதாரண நபர்தான், ஒரு காசோலை எழுதிக்கொடுத்தால் போதும் என்று கூறும் Auderer, 11,000 டொலர்களா, அவளுக்கு 26 வயதாகிறது, அந்த அளவுக்கெல்லாம் அவளுக்கு மதிப்பில்லை என்று கூறிச் சிரிக்கிறார்.
இந்த சம்பவம் குறித்து, அவர்களுடன் பொலிஸ் காரில் பயணித்த வேறொரு பொலிசார் புகாரளித்ததைத் தொடர்ந்து விடயம் வெளியே வர, கடும் சர்ச்சை உருவாகியுள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமெரிக்கா வாழ் இந்தியர்களும் ஜானவியின் மரணம் குறித்து அதிர்ச்சியையும் கோபத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்கள்.
பல்கலை எடுத்துள்ள முடிவு
வாஷிங்டனிலுள்ள வடகிழக்குப் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பிரிவு ஒன்றில் முதுகலை பயின்றுவந்தார் ஜானவி.
இந்த டிசம்பரில் அவர் படிப்பை முடித்து பட்டம் பெற்றிருக்கவேண்டும். ஆனால், அதற்குள் அந்த பொலிசார் அவளது வாழ்வையே முடித்துவிட்டார்கள்.
ஆகவே, ஜானவிக்கு, அவள் இறந்தபிறகும், பட்டம் வழங்குவது என அவர் பயின்றுவந்த பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. நேற்று இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், அந்த துயர சம்பவம் தொடர்பாக விரைவாக முழுமையான விசாரணை ஒன்று அமைக்க இருப்பதாக ஜோ பைடன் நிர்வாகம் உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |