நாயுடன் தான் நாடு திரும்புவேன்: உக்ரைனை விட்டு வெளியேற உதவி கோரும் இந்திய மாணவர்!
போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் சிக்கித் தவிக்கும் பொறியியல் மூன்றாம் ஆண்டு மாணவர் ஒருவர் தனது செல்ல நாய் இல்லாமல் நாட்டை விட்டு வெளியேற மறுத்துள்ளார். இதனால் அவர் உக்ரைன் நாட்டை விட்டு வெளியேறுவதில் சிக்கல் நீடித்து வருகிறது.
ரிஷப் கௌஷிக் (Rishabh Kaushik) எனும் அந்த இந்திய மாணவர் கிழக்கு உக்ரைனில் உள்ள கார்கிவ் நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப் ரேடியோ எலக்ட்ரானிக்ஸில் படிக்கிறார்.
உலகமே அதிர்ச்சியோடு உற்றுக் கவனித்துக்கொண்டிருக்கும் இவ்வளவு களேபரத்திற்கு மத்தியிலும் இவருக்கு தனது செல்ல நாய்க்குட்டியை விட்டு பிரிய மனமில்லை. இதன் காரணமாக தற்போது இந்தியா திரும்புவதில் தொடர்ந்து நெருக்கடிகளை சந்தித்து வருகிறார். மாலிபு (நாய்க்குட்டியின் பெயர்) தன்னோடு அழைத்துக்கொண்டு இந்தியாவுக்கு வரவேண்டும் என்பதுதான் ரிஷபின் விருப்பம்.
அதற்கான அனைத்து சட்ட நடைமுறைகளையும் உரிய விதிமுறைகளை தான் பின்பற்றுவதாகவும் அதற்கான ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளதாக அவர் கூறுகிறார். ஆனால் மேலும் மேலும் ஆவணங்கள் கோரப்பட்டு அதிகாரிகளால் அவர் தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து இந்திய அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுக்கும் விதமாக ரிஷப் வீடியோ ஒன்றை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். அந்த வீடியோவில், கடந்த பிப்ரவரி மாதம் கார்கிவ் நகரில் ஆதரவற்று சுற்றிக்கொண்டிருந்த அந்த நாய்க்குட்டியை மீட்டுக்கொண்டு வந்து நான் அதை வளர்க்கத் தொடங்கினேன். இந்த நாய்க்குட்டிக்கு மாலிபு என்று பெயர் வைத்துள்ளேன். அதிகாரிகள் எனது விமான டிக்கெட்டை அவர்கள் கேட்கிறார்கள்.
உக்ரேனிய வான்வெளி மூடப்பட்டிருக்கும் போது நான் எப்படி விமான டிக்கெட்டைப் பெற முடியும்? புதுடெல்லியில் உள்ள இந்திய அரசின் விலங்குத் தனிமைப்படுத்தல் மற்றும் சான்றிதழ் சேவை (AQCS) மற்றும் உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகத்தை அணுகினேன். ஆனால் அதில் எந்த பலனும் கிடைக்கவில்லை.
பின்னர், டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ஒருவரை அழைத்து எனது பிரச்சினையை விளக்க முயற்சித்தேன். ஆனால், மறுமுனையில் இருந்த அந்த அந்த நபரும் கண்டபடி திட்டினார் தவிர என்னுடைய கோரிக்கைக்கு அவர் ஒத்துழைக்கவில்லை.
எனது விமானம் பிப்ரவரி 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று என்ற நிலையில் தற்போது ஊருக்கு செல்லாமல் நான் இங்கே சிக்கிக்கொண்டேன். (தனது நாய்க்கட்டியைக் காட்டி) தொடர்ந்து குண்டுவெடிப்புச் சத்தங்களால் இந்த மாலிபு நாய்க்குட்டி மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளது. எப்பொழுதும் அது அழுதுகொண்டிருக்கிறது.
இந்திய அரசாங்க அதிகாரிகள், தயவுகூர்ந்து உங்களால் முடிந்தால், எங்களுக்கு உதவுங்கள். கியேவில் உள்ள இந்திய தூதரகம் கூட எங்களுக்கு உதவவில்லை. இதனால் மேற்கொண்டு எதுவும் செய்யமுடியாமல் தவிக்கிறோம்." என்று அவர் இந்திய அரசாங்கத்திடம் தனது முறையீட்டை முன்வைத்துள்ளார்.