ஜேர்மனியில் இந்திய இளம்பெண்ணுக்குக் கிடைத்த மோசமான அனுபவம்
இந்திய இளம்பெண்ணொருவர் ஜேர்மன் ஹொட்டல் ஒன்றில் தான் மரியாதைக் குறைவாக நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
பணி நிமித்தம் ஜேர்மனியில் தங்கியுள்ள இந்திய இளம்பெண்ணொருவர், சமீபத்தில் அங்குள்ள ஹொட்டல் ஒன்றிற்குச் சென்ற நிலையில், ஹொட்டல் ஊழியர் ஒருவர் அவரை மரியாதைக் குறைவாக நடத்தியுள்ளார்.
இளம்பெண் சந்தித்த மோசமான அனுபவம்
அறிவியலாளரான அனன்யா என்னும் அந்த இளம்பெண், தன் தோழி ஒருவருடன் Rostock நகரிலுள்ள Peter Pane Burger Grill என்னும் ஹொட்டலுக்குச் சென்றுள்ளார்.

வழக்கமாக, ஜேர்மன் ஹொட்டல்களில் ஊழியர் ஒருவர் வாசலில் நின்று, வருபவர்களை வரவேற்று இருக்கை இருந்தால் அங்கு அழைத்துச் சென்று அவர்களை அமரவைப்பார்.
ஆனால், அனன்யாவும் அவரது தோழியும் சென்ற ஹொட்டலில் யாரும் இல்லையாம். அவர்கள் சுமார் ஐந்து நிமிடங்கள் வாசலில் காத்திருக்க, அங்கு வந்த ஜேர்மன் குடும்பம் ஒன்று யாருக்கும் காத்திருக்காமல் நேரே சென்று இருக்கைகளில் அமர்ந்துகொண்டனராம்.
ஆக, காத்திருந்து யாரும் வராததால் அனன்யாவும் தன் தோழியுடன் ஹொடலுக்குள் சென்றிருக்கிறார். என்றாலும் எந்த இருக்கையிலும் அமராமல், யாராவது ஊழியர்கள் வருவார்களா என பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார்கள் இருவரும்.
சற்று நேரத்தில் முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு வந்த ஒருவர், அவர்களிடம் வந்து, நீங்கள் நேரே உள்ளே வரக்கூடாது என்று உங்களுக்குத் தெரியாதா, நீங்கள் வெளியே காத்திருக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
நாங்கள் ஏற்கனவே சுமார் 5 நிமிடம் காத்திருந்தோம், யாரும் வராததால்தான் உள்ளே வந்தோம் என அனன்யா கூற, இல்லை, நீங்கள் பொய் சொல்கிறீர்கள், 10 விநாடிகள்தான் நீங்கள் காத்திருந்தீர்கள் என சத்தமிட்டுள்ளார் அந்த ஊழியர்.

அவரிடம் எவ்வளவு விளக்கமுயன்றும் அவர்கள் கூறியதை அவர் ஏற்காமல், உங்களுக்கு அவ்வளவு பசியா, நேரே வந்துவிட்டீர்களே என்பது போல கேலியாக பேசியதுடன், அவர்களை ஒரு மேசையருகே அமரவைத்துவிட்டு, மெனு கார்டை தொம்மென்று மேசையில் வைத்திருக்கிறார்.
அத்துடன் நிற்காமல், ஹொட்டலுக்கு வந்த மற்றவர்களிடம் சென்று, இவர்களை கைகாட்டி ஏதோ அவர் பேச, இதற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாது என முடிவு செய்து ஹொட்டலை விட்டு வெளியேறியுள்ளனர் அனன்யாவும் அவரது தோழியும்.
அனன்யா, தான் முதன்முறையாக ஜேர்மனியில் இப்படி ஒரு விரும்பத்தகாத சம்பவத்தை எதிர்கொண்டது குறித்து சமூக ஊடகம் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில், Peter Pane Burger Grill உணவகம், அனன்யாவிடம் மன்னிப்புக் கோரியுள்ளது.
அனன்யாவின் சமூக ஊடக இடுகைக்கு பதிலளித்துள்ள அந்த உணவகம், உங்கள் வீடியோவைப் பார்த்தோம், நீங்கள் சந்தித்த மோசமான அனுபவத்துக்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளது.
எங்கள் நிறுவனத்தில் 100 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பணி புரிந்துவருகிறார்கள். எங்கள் உணவகத்தில் எல்லோருக்கும் வரவேற்புண்டு என்று கூறியுள்ள அந்த உணவகம், உங்களுக்கு சரியான வரவேற்பும் மரியாதையும் கொடுக்கப்படாததற்காக வருந்துகிறோம் என்றும், இந்த விடயம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவருகிறோம் என்றும் கூறியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |