திடீரென்று 50 டன் தங்க நகைகளை விற்று தள்ளிய இந்தியர்கள்: என்ன காரணம்
தங்கத்தின் விலை சாதனை அளவுகளை எட்டிய பிறகு தற்போது குறைந்து வருவதால், விலை இன்னும் அதிகமாக இருக்கும்போதே தங்கள் பழைய நகைகளை விற்றுப் பணமாக்கப் பல குடும்பங்கள் ஆர்வம் காட்டி வருதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
நேரடியாக விற்பனை
இன்றைய தினம் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.106,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.70 குறைந்து, ரூ.13,300க்கு விற்பனையாகிறது.

இது சில வாரங்களுக்கு முன்பு விற்பனையான வரலாற்று உச்சத்தை விட குறைவு. இதனால் மக்கள் பழைய நகைகளை புதிய நகைகளாக மாற்றுவதற்குப் பதிலாக நேரடியாக விற்கத் தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், இந்திய புல்லியன் மற்றும் ஜூவல்லர்ஸ் சங்கத்தின் தகவலின்படி ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்தியக் குடும்பங்கள் சுமார் 50 டன் பழைய தங்கத்தை விற்றுள்ளன; லாபம் ஈட்டும் நோக்கில் பலர் முன்வந்ததால், இது முந்தைய ஆண்டை விட 43 சதவீதம் அதிகரிப்பாகும்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் தங்கத்தின் விலை சாதனை அளவை எட்டியது; இருப்பினும், அண்மைய வாரங்களில் அதில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டது.
பல நுகர்வோர் தற்போது விலைகள் உச்சத்தை அடைந்துவிட்டதாகவும், மேலும் குறையக்கூடும் என்றும் நம்புகிறார்கள். சமீபத்தில் 10 கிராம் தங்கம் சுமார் ரூ 1.4 லட்சத்திற்கு வர்த்தகமாகி வருவதாலும், அதன் விலை சுமார் ரூ 1.2 லட்சமாகக் குறையக்கூடும் என்ற சந்தை எதிர்பார்ப்புகளாலும், வீடுகளில் பழைய நகைகளை வைத்திருப்பதை விட அவற்றை பணமாக்கவே மக்கள் விரும்புகிறார்கள்.
மேலும், சர்வதேச சந்தைகளில் தங்கத்தின் விலை அழுத்தத்தில் இருக்கும் நிலையில், இந்த விற்பனைப் போக்கு ஏற்பட்டுள்ளது என்றே கூறுகின்றனர்.
பொதுவாக அதிக வட்டி விகிதங்கள் தங்கத்தின் மீதான ஈர்ப்பைக் குறைக்கின்றன, ஏனெனில் இந்த உலோகம் எந்தவொரு நிலையான வருமானத்தையும் வழங்குவதில்லை. இது முதலீட்டாளர்களை வட்டி தரும் சொத்துக்களை நோக்கி நகரத் தூண்டுகிறது.

பழைய தங்க நகைகளின் விற்பனையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு, இந்தியாவின் ஒழுங்கமைக்கப்பட்ட தங்க மறுசுழற்சித் தொழிலுக்கும் பயனளிக்கிறது.
பழைய நகைகள் லாக்கர்களில் முடங்கிக் கிடப்பதற்குப் பதிலாக, அவை மீண்டும் முறைசார் பொருளாதாரத்திற்குள் கொண்டுவரப்பட்டு, தூய தங்கமாகப் பதப்படுத்தப்பட்டு, நகை உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படுகின்றன.
200-250 டன்களாக
இந்தியா உலகின் மிகப்பெரிய தங்க நுகர்வோர் நாடுகளில் ஒன்றாக இருந்தாலும், அது பயன்படுத்தும் இந்த விலைமதிப்பற்ற உலோகத்தில் பெரும்பாலானவற்றை இறக்குமதி செய்கிறது.
வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில், 2026 நிதியாண்டில் இந்தியா சுமார் 72.4 பில்லியன் டொலர் மதிப்புள்ள தங்கத்தை இறக்குமதி செய்துள்ளது.

மறுசுழற்சி செய்யப்பட்ட தங்கம் 2025-ஆம் ஆண்டில் சுமார் 125-150 டன்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய போக்கு தொடர்ந்தால், இந்த ஆண்டு இது 200-250 டன்களாக உயரக்கூடும் எனத் தொழில்துறை மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
இந்தியக் குடும்பங்களில் ஏறத்தாழ 30,000 டன் தங்கம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், ஒழுங்கமைக்கப்பட்ட மறுசுழற்சியானது நாட்டின் இறக்குமதிச் சார்பைக் குறைப்பதோடு, பயன்படுத்தப்படாமல் தேங்கியுள்ள சொத்துக்களின் மதிப்பை நுகர்வோர் கண்டறியவும் உதவும் எனத் தொழில்துறை நிர்வாகிகள் நம்புகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |