புலம்பெயர்ந்தோரை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தும் கட்சி: ஜேர்மன் அமைச்சர் குற்றச்சாட்டு
ஜேர்மனியில் சமீப காலமாக வலதுசாரிக் கட்சி ஒன்று மக்கள் ஆதரவைப் பெற்றுவரும் நிலையில், அக்கட்சி புலம்பெயர்ந்தோரை இரண்டாம் தர குடிமக்களாக நடத்துவதாக ஜேர்மன் உள்துறை அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
வலதுசாரிக் கட்சி மீது குற்றச்சாட்டு
ஜேர்மன் உளவுத்துறை ஏஜன்சியான BfV, வலதுசாரிக் கட்சியான Alternative for Germany (AfD) கட்சி தீவிரக் கொள்கைகள் கொண்ட ஒரு கட்சி என தெரிவித்துள்ளது.
அக்கட்சி தொடர்பில் மேற்கொண்ட விரிவான ஆய்வைத் தொடர்ந்து, AfD கட்சிக்குள் ஆதிக்கம் செலுத்துவோரின், மக்கள் குறித்த இனம் மற்றும் வம்சாவளி அடிப்படையிலான கருத்து, சுதந்திரமான ஜனநாயக ஒழுங்கிற்கு ஏற்புடையதாக இல்லை என BfV கூறியுள்ளது.
சில குறிப்பிட்ட மக்கள் குழுக்களை சமூகத்தில் சமமாகப் பங்கேற்பதிலிருந்து விலக்குவதும், அரசியலமைப்பை மீறும் வகையில் அவர்களை நடத்துவதும், அதன் மூலம் அவர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்துவதும் அக்கட்சியின் நோக்கமாகும் என்றும் BfV கூறியுள்ளது.
இந்நிலையில், ஜேர்மன் உள்துறை அமைச்சரான நான்சி ஃபேஸர், உளவுத்துறை அமைப்பின் கண்டுபிடிப்பின் பின்னணியில் அரசியல் தாக்கம் எதுவும் இல்லை என்று கூறியுள்ளார்.
AfD கட்சி, அனைத்து மக்கள் குழுக்களுக்கும் எதிராக பாகுபாடு காட்டும் ஒரு இனக் கருத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்று கூறியுள்ள நான்சி, புலம்பெயர்தல் பின்னனி கொண்ட குடிமக்களை அக்கட்சி இரண்டாம் தர குடிமக்களாக நடத்துகிறது என்றும் கூறியுள்ளார்.
அக்கட்சியின் இன மனப்பான்மை, குறிப்பாக புலம்பெயர்ந்தோர் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான இனவெறுப்பு அறிக்கைகளில் பிரதிபலிக்கிறது என்றும் கூறியுள்ளார் அவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |