ஜேர்மனியில் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் அறிமுகம்
ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கலும், 16 மாகாண பிரீமியர்களும், ஜேர்மனியில் புதிய கொரோனா கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்துள்ளார்கள்.
மருத்துவமனைகள் மற்றும் நர்ஸிங் ஹோம்களில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் தடுப்பூசிகள் வழங்குவது குறித்து அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.
அத்துடன், மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையைப் பொருத்து, அந்தந்த மாகாணங்களில் 2G கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துவதற்கு அனைத்து தலைவர்களும் சம்மதம் தெரிவித்துள்ளார்கள். 2G என்பது, கொரோனா தடுப்பூசி பெற்றவர்கள் மற்றும் கொரோனாவிலிருந்து விடுபட்டவர்களுக்கு மட்டுமே, உணவகம் முதல் பொழுதுபோக்கு அம்சங்கள் வரையிலான விடயங்களை அணுக அனுமதியளிக்கும் ஒரு நடைமுறையாகும்.
இது மிகவும் கவலையை ஏற்படுத்தியுள்ள ஒரு சூழல் என்று கூறிய மெர்க்கல், கண்டிப்பாக நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டிய நேரம் இது என்றார்.
தடுப்பூசி பெறாதவர்கள் எண்ணிக்கை இவ்வளவு பெரிதாக இல்லாமலிருந்திருந்தால், நாம் இவ்வளவு மோசமாக பாதிக்கப்பட்டிருக்கமாட்டோம் என்பது நமக்கே தெரியும் என்றார் அவர்.
ஜேர்மனியில் தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை வெறும் 68 சதவிகிதம் அளவிலேயே உள்ளதுடன், கிழக்கு மற்றும் தெற்கு ஜேர்மனி பகுதிகளில் அது இன்னமும் குறைவாக உள்ளது. ஆனால், கொரோனா தொற்றும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையுமோ வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துவிட்டன.
நேற்று முன்தினம், பெடரல் நாடாளுமன்றம் சில புதிய கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்வது தொடர்பாக வாக்களித்தது.
அதன்படி, மருத்துவமனைகள் மற்றும் நர்ஸிங் ஹோம்களில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும், அவர்கள் தடுப்பூசி பெற்றிருந்தாலும் சரி, பெறாவிட்டாலும் சரி, கட்டாய தினசரி கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், 3 G விதிகள், அதாவது, கொரோனா தடுப்பூசி பெற்றவர்கள், கொரோனாவிலிருந்து விடுபட்டவர்கள் மற்றும் கொரோனா பரிசோதனை செய்து தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என நிரூபிப்பவர்களுக்கு மட்டுமே வேலையிடங்களிலும், பொதுப்போக்குவரத்திலும் அனுமதி என்ற விதிகளும், வீடுகளிலிருந்தவண்ணம் வேலை செய்வதும் மீண்டும் அறிமுகம் செய்யப்பட உள்ளன.