பிரித்தானியாவில் 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி: அறிவிப்பு விரைவில்
பிரித்தானியாவில் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த வாரத்தில் இருந்தே தடுப்பூசி பெற்றுக்கொள்ள முடியும் என சுகாதாரத் துறை செயலர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் 20 வயது கடந்தவர்கள் இன்னும் சில நாட்களில் தடுப்பூசி பெற்றுக்கொள்ள தயாராக வேண்டும் என மாட் ஹான்காக் அறிவித்துள்ளார்.
மேலும் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பைசர் தடுப்பூசி அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான ஆதரவை மாட் ஹான்காக் தெரிவித்துள்ளார்.
டெல்டா மாறுபாடு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், தடுப்பூசி அளிப்பதே பாதுகாப்பு என்பதால் அமைச்சர்கள் அதற்கான திட்டங்களுடன் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர்.
முன்னர் அடையாளம் காணப்பட்ட கென்ட் மாறுபாடுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட டெல்டா மாறுபாடானது 40% அதிகமாக பரவும் ஆபத்து இருப்பதாக உறுதி படுத்தப்பட்டுள்ளது.
டெல்டா மாறுபாட்டால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தாலும், மருத்துவமனையை நாடுவோரின் எண்ணிக்கை சரிவடைந்துள்ளதற்கு காரணம் தடுப்பூசி மட்டுமே என மாட் ஹான்காக் சுட்டிக்காட்டியுள்ளார்.
தடுப்பூசி இதுவரை எடுத்துக் கொள்ளாதவர்களே கொரோனா பாதிப்பால் மருத்துவமனையை நாடுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த வாரத்தில் இருந்தே 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி அளிக்கும் திட்டம் செயல்பாட்டுக்கு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது வரை 30 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ளலாம்.
வெளியாகும் தகவலின் அடிப்படையில், ஆகஸ்டு மாதத்தில் இருந்து பள்ளி மாணவர்களுக்கான தடுப்பூசி அளிக்கப்பட்டும் என்றே தெரிய வந்துள்ளது.
இங்கிலாந்தில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் இப்போது முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளனர்,
23 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஏற்கனவே இரண்டு டோஸ்களையும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.