கோலி-சாஸ்திரி இடையே ஏற்பட்ட பிளவே உலகக் கோப்பையிலிருந்து இந்தியா வெளியேற காரணம்: இன்சமாம்
2021 டி20 உலகக் கோப்பையிலிருந்து இந்தியா முன்கூட்டியே வெளியேறியதற்கான பின்னணி காரணத்தை பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் வெளிப்படுத்தியுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் டி20 உலகக் கோப்பையில் சூப்பர் 12 சுற்றுடன் இந்திய அணி வெளியேறியது.
இதுகுறித்து பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் கூறியதாவது, 2021 டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக விராட் கோலி, ரவி சாஸ்திரி இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கலாம், இதன் விளைவாக தொடரிலிருந்து இந்தியா முன்கூட்டியே வெளியேறியது என தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பைக்கு முன்னே நான் சொன்னேன், போட்டி முடிந்த பிறகு கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக கோலி அறிவித்துள்ளது நல்லதல்ல என்று.
பெரிய போட்டியில் விளையாட இருக்கும் போது, இவ்வாறான அறிவிப்பு அவர் மீது அழுத்தம் இருப்பதையும், அசௌகரியமாக இருப்பதையும் காட்டுகிறது.
உலகக் கோப்பைக்கு பிறகு, சாஸ்திரிக்குப் பதிலாக டிராவிட் தலைமை பயிற்சியாளராக வருவார் என்பது அவர்கள் அனைவருக்கும் தெரியும்.
உலகக் கோப்பைக்கு முன் இது நடந்திருக்ககூடாது. இதன் மூலம் கோலி, சாஸ்திரி மற்றும் பிசிசிஐ இடையேயான உறவு சுமூகமாக இல்லை என தெரிகிறது.
டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றால் கேப்டன் மற்றும் பயிற்சியாளரை நீக்கியிருப்பார்களா? அவர்களுக்கு இடையே சில பிரச்சனைகள் இருந்தன என இன்சமாம் தெரிவித்துள்ளார்.