2021 ஐபிஎல்: தமிழக வீரர் உட்பட இருவருக்கு கொரோனா... இன்று நடைபெறவிருந்த கொல்கத்தா-பெங்களூர் இடையேயான போட்டி ஒத்திவைப்பு!
2021 ஐபிஎல் தொடரில் இன்று கொல்கத்தா-பெங்களூர் இடையே நடைபெறவிருந்த லீக் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் தற்போது ஐபிஎல் போட்டிகள் தேவையா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
எனினும், இந்த இக்கட்டான சூழலில் ஐபிஎல் போட்டிகள் நாட்டு மக்களுக்கு சற்று மகிழ்ச்சியையும் ஓய்வு நேரத்தையும் அளிக்கிறது என அரசு கருதுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கொல்கத்தா அணியில் பல வீரர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால், அந்த அணி வீரர்கள் மற்றும் ஊழியர்கள் தனிப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொல்கத்தா அணியில் விளையாடும் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி மற்றும் கேரளவைச் சேர்ந்த சந்தீப வாரியருக்கு கொரோனா உறுதியானது என பிசிசிஐ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. சந்தீப் வாரியர் தமிழநாட்டு அணிக்காக முதல் தர கிரிக்கெட்டில் விளையாடி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக இன்று இரவு 7:30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவிருந்த கொல்கத்தா-பெங்களூர் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவிற்கு ஆக்ஸிஜன் வாங்க கொல்கத்தா அணியில் விளையாடும் அவுஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் 50,000 டொலர் நிதியுதவி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.