வெறும் 10 போட்டிகளில் மட்டுமே விளையாடிய தமிழன் வெங்கடேஷுக்கு ஐபிஎல்லில் அடித்த அதிர்ஷ்டம்!
இதுவரை 10 ஐ.பி.எல் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெங்கடேஷ் ஐயர் நல்ல விலைக்கு கொல்கத்தா அணியால் தக்கவைக்கப்பட்டுள்ளார்.
2022 ஐபிஎல் தொடர் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் நடக்கவுள்ள நிலையில் இந்த தொடரில் பங்கேற்க உள்ள 8 அணியுடன் சேர்ந்து லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களை தலைமையாகக் கொண்ட புதிய இரண்டு அணிகளும் இணைவதால் மொத்தம் 10 அணிகள் அடுத்த சீசனில் விளையாட இருக்கின்றன.
இந்த நிலையில் அணிகள் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியல் நேற்று வெளியானது. அந்த வகையில் கொல்கத்தா அணி தங்களது அணியில் தக்க வைக்கும் 4 வீரர்களை அதிகாரபூர்வமாக அறிவித்தது. - அதன்படி ஆண்ட்ரே ரசல் 12 கோடிக்கும், வருண் சக்கரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் 8 கோடிக்கும், சுனில் நரைன் 6 கோடிக்கும் தக்கவைக்கப்பட்டனர்.
இதில் குறிப்பிடப்பட வேண்டிய விடயம் யாதெனில் கடந்த ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியில் கொல்கத்தா அணிக்காக அறிமுகமாகிய வெங்கடேஷ் ஐயர் இதுவரை 10 ஐ.பி.எல் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். இந்த 10 போட்டிகளிலேயே தனது சிறப்பான ஆட்டத்தை பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் வெளிப்படுத்தினார்.
இதன் காரணமாக அவருக்கு இந்திய அணியில் அறிமுகமாகும் வாய்ப்பும் கிடைத்தது. அண்மையில் நடைபெற்று முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெற்றிருந்த அவர் மூன்று போட்டிகளிலும் விளையாடி இருந்தார்.
இதையடுத்து அவருக்கு இந்த ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய அதிஷ்டம் கிடைத்து உள்ளது. ஏனெனில் இந்திய அணிக்காக விளையாடாமல் இருக்கும் ஒரு வீரரை அணியில் தக்கவைக்கும் போது அவருக்கு அதிகபட்சம் 4 கோடி வரை மட்டுமே கிடைத்திருக்கும்.
ஆனால் அவர் அண்மையில் இந்திய அணிக்காக அறிமுகமாகி இருந்ததால் அவர் தற்போது 8 கோடிக்கு கொல்கத்தா அணியால் தக்க வைக்கப்பட்டுள்ளார்.