பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெற உள்ள IPL? ஐபிஎல் தலைவர் விளக்கம்
பார்வையாளர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டிகளை நடத்த வெளியான கோரிக்கைக்கு ஐபிஎல் தலைவர் விளக்கமளித்துள்ளார்.
ஐபிஎல் 2026
2026 ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 28 ஆம் திகதி தொடங்கி மே 31 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது. 13 மைதானங்களில் நடைபெற்று வரும் இந்த தொடரில், மொத்தமுள்ள 74 போட்டிகளில் 62 போட்டிகள் முடிவடைந்துள்ளது.

ஏற்கனவே இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியை காண ரசிகர்களிடைய ஆர்வம் குறைந்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், தற்போது பார்வையாளர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டியை நடத்த வேண்டும் என குரல் எழுந்துள்ளது.
ஈரான் போரால் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில், பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை கடைபிடிக்க இந்திய பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
பார்வையாளர்களில் இல்லாமல் நடத்த கோரிக்கை
பார்வையாளர்கள் இல்லாமல், குறைந்த மைதானங்களில் ஐபிஎல் போட்டிகளை நடத்த வேண்டுமென வர்த்தக மற்றும் தொழில்துறை சபை (CTI), மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு கடிதம் எழுதியுள்ளது.
சிடிஐ தலைவர் பிரிஜேஷ் கோயல் எழுதியுள்ள இந்த கடிதத்தில், "2026 ஐபிஎல் தொடர் தொடங்கியதிலிருந்து, அணிகள் இதுவரை விமானம் மற்றும் சாலை வழியாக லட்சக்கணக்கான கிலோமீட்டர்களைக் கடந்திருக்கக்கூடும்.
அணிகளின் போட்டி அட்டவணைகள் மற்றும் வெவ்வேறு நகரங்களில் போட்டிகள் ஏற்பாடு செய்யப்படும் விதத்தைக் கருத்தில் கொண்டால், தளவாடக் கண்ணோட்டத்தில் இந்தப் பயணம் நியாயமானதே.
இருப்பினும், தற்போதைய சூழ்நிலையில், இந்த விரிவான விமானப் பயணம் இந்திய அரசாங்கத்திற்கு ஒரு கூடுதல் சுமையை ஏற்படுத்தக்கூடும்.

மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் பார்வையாளர்கள் இல்லாமல், குறைந்த எண்ணிக்கையிலான மைதானங்களில் நடத்தப்பட வேண்டும். கொரோனா காலத்திலும் கூட, ஏற்பாட்டாளர்கள் குறைந்த எண்ணிக்கையிலான மைதானங்களில் ஐபிஎல்ஐ வெற்றிகரமாக நடத்தினார்கள்.
ஒவ்வொரு ஐபிஎல் அணியும் கிட்டத்தட்ட 50,000 முதல் 70,000 லிட்டர் விமான எரிபொருளைப் பயன்படுத்துகிறது என்று கூறலாம். ஒரு போட்டிக்கு சராசரியாக சுமார் 50,000 பார்வையாளர்கள் வருவதால், ஆயிரக்கணக்கான லிட்டர் பெட்ரோலும், டீசலும் பயன்படுத்தப்படுகின்றன.
தற்போதைய தேவை என்னவென்றால், ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளை குறைந்த எண்ணிக்கையிலான மைதானங்களில் பார்வையாளர்கள் இல்லாமல் நடத்துவதற்காக மறு அட்டவணைப்படுத்துவதாகும்.
இது லட்சக்கணக்கான லிட்டர் எரிபொருள், பெட்ரோல் மற்றும் டீசலை சேமிப்பதோடு, நாட்டின் மீதான சுமையையும் குறைக்கும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐபிஎல் தலைவர் விளக்கம்
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐபிஎல் தலைவர் அருண் தூமல், "எனக்குத் தெரிந்தவரை, இதுவரை பிசிசிஐக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. சுதந்திரமான அமைப்புகளுக்கு சில விஷயங்களில் அவர்களின் சொந்தக் கருத்துக்கள் இருக்கலாம்.

ஆனால் நாங்கள் இந்திய அரசாங்கத்திற்குப் பொறுப்புடையவர்கள். அரசாங்கத்திடமிருந்து ஏதேனும் தகவல் வந்தால், நாங்கள் அதை ஆராய்ந்து, அவர்களின் வழிகாட்டுதல்களை நிச்சயமாகப் பின்பற்றுவோம்” என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |