கொரோனா பரவல் எதிரொலி! ஐபிஎல் கிரிக்கெட் தொடர்பில் முக்கிய தகவல் வெளியானது
ஐபிஎல் போட்டி நடைபெறும் காலக்கட்டத்தில் கொரோனா நிலையை கருத்தில் கொண்டு 2-வது திட்டம் செயல்படுத்தப்படும் என தெரியவந்துள்ளது.
இது குறித்த தகவலை இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல்- மே மாதங்களில் இந்தியாவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் (பிப்ரவரி) 12 மற்றும் 13-ந் திகதிகளில் பெங்களூரில் நடக்கிறது. இதற்கிடையே இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஐ.பி.எல். போட்டிகளை ஒரே இடத்தில் நடத்த கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டு உள்ளது.
வீரர்களின் பாதுகாப்பு கருதி 2-வது திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. போட்டி நடைபெறும் காலக்கட்டத்தில் கொரோனா நிலையை கருத்தில் கொண்டு 2-வது திட்டம் செயல்படுத்தப்படும்.
இதன்படி அனைத்து ஐ.பி.எல். ஆட்டங்களையும் மராட்டிய மாநிலம் மும்பையில் நடத்த கிரிக்கெட் வாரியம் முடிவு செய்து உள்ளது. அங்குள்ள வான்கடே மைதானம், பிரபோர்ன் ஸ்டேடியம், நவீன் மும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியம் ஆகிய 3 மைதானங்களில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டி ஏப்ரல் 12-ந் திகதி தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.