பஞ்சாப் அணியில் இருந்து விலகி ஆர்சிபி கேப்டனாக கே.எல்.ராகுல் திட்டம்? கசிந்த தகவல்
பஞ்சாப் கிங்ஸ் அணியிலிருந்து கேப்டன் கே.எல்.ராகுல் விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதாவது, அடுத்து சீசன் கே.எல்.ராகுல் பஞ்சாப் அணியில் விளையாடமாட்டார் என கூறப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அடுத்த ஐபிஎல் சீசனுக்கான தக்கவைப்புக் கொள்கையை இன்னும் அறிவிக்காத நிலையில், மெகா ஏலம் நடக்கும் போது ஒரு அணி எத்தனை வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம் மற்றும் Right To Match (RTM) கார்ட்ஸ் குறித்து அணிகளிடையே இன்னும் சில தெளிவின்மை இருக்கிறது.
இந்நிலையில் CRICBUZZ வெளியிட்ட தகவல்களின் படி, எந்த ஒரு அணியும் ஏலத்தில் தங்கள் RTM கார்டை பயன்படுத்தலாம்.
இந்நிலையில், கே.எல்.ராகுல் பஞ்சாப் கிங்ஸ் அணியிலிருந்து விலகுவது தொடர்பில் அணிக்குள் விவாதம் நடைபெற்று வருவதாகவும், அவர் சுமுகமாக அணியிலிருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆனால் பஞ்சாப் கிங்ஸ் அணியின் நிர்வாகி ஒருவர் இதனை மறுத்துள்ளார் எனவும் CRICBUZZ தெரிவித்துள்ளது.
அதேசமயம், ஆர்சிபி கேப்டன் பதவியலிருந்து கோலி விலகுவதையடுத்து, கே.எல்.ராகுல் பஞ்சாப் அணியிலிருந்து விலகி தனது சொந்த மாநிலமான கர்நாடகா பிரான்சைசி ஆர்சிபி கேப்டனாக பதவி ஏற்க திட்டமிட்டுள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளது.