Fifa உலகக் கிண்ணம்... ஆட்டம் முடிந்ததும் உடனடியாக வெளியேற்றப்பட்ட ஈரானிய அணி
நியூசிலாந்துடனான ஆட்டம் முடிந்த சில நிமிடங்களிலேயே, அமெரிக்காவை விட்டு வெளியேறுமாறு ஈரான் அணி கட்டாயப்படுத்தப்பட்டதாக அந்த அணியின் கேப்டன் மெஹ்தி தரேமி தெரிவித்துள்ளார்.
தரேமி அதிருப்தி
குறித்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்திருந்தது. அமீர் காலனோயி தலைமையிலான அணி, இத்தொடரின் தங்கள் முதல் ஆட்டத்தில் ஒரு கோல் பின்தங்கிய நிலையிலிருந்து இருமுறை மீண்டு வந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

ஆனால், உடனடியாக திஜுவானாவில் உள்ள தங்கள் முகாமுக்குத் திரும்பிச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்ட பிறகு, அணியினர் நடத்தப்படும் விதம் குறித்து முன்கள ஆட்டக்காரரான தரேமி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
லாஸ் ஏஞ்சல்ஸில் நான்கு கோல்கள் அடிக்கப்பட்ட பரபரப்பான ஆட்டத்திற்கு முன்பு, ஈரானின் தேசிய கீதத்திற்கு அங்கு கூடியிருந்த ரசிகர்கள் கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரான் வீரர்களுக்கு கூடுதல் ஆதரவை வழங்குமாறு ஃபிஃபாவை தரேமி வலியுறுத்தினார்.
ஆட்டத்திற்குப் பிறகு ஃபிஃபா தலைவர் கியானி இன்ஃபான்டினோ ஈரான் உடை மாற்றும் அறைக்குள் சென்ற நிலையில், அணியினர் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாக தரேமி தெரிவித்துள்ளார்.
விசித்திரமான கோரிக்கை
நியூசிலாந்துடனான ஆட்டம் சமனில் முடிந்ததன் பின்னர் பேசிய தரேமி, நாங்கள் தற்போதே லாஸ் ஏஞ்சல்ஸை விட்டு வெளியேற வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளோம்.
இது எங்களுக்கு நல்லதல்ல. கால்பந்தாட்டத்திற்கும் நல்லதல்ல, ஏனென்றால் உலகக் கிண்ணம் தொடரில், அடுத்த ஆட்டத்திற்கு நன்றாகத் தயாராக வேண்டும். ஏனென்றால் இது வீரர்களுக்கும், ஊழியர்களுக்கும், மற்றும் அனைவருக்கும் மிகுந்த மன அழுத்தத்தை அளிக்கிறது.
எங்களுக்கு எந்த ஆதரவும் இல்லை, மேலும் ஃபிஃபா இதைவிட அதிகமாக எங்களுக்கு உதவ முன்வர வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்றார்.

திஜுவானாவுக்கு உடனடியாகவே திரும்ப வேண்டும் என்பது வீரர்களுக்கு கடும் நெருக்கடியை அளித்துள்ளது என்றும், இது விசித்திரமான கோரிக்கை எனவும் அமீர் காலனோயி குறிப்பிட்டுள்ளார்.
உலகக் கிண்ணம் தொடரில் ஈரான் இன்னும் குறைந்தது இரண்டு போட்டிகளில் விளையாட உள்ளது. ஞாயிற்றுக்கிழமை லாஸ் ஏஞ்சல்ஸில் பெல்ஜியத்தை எதிர்கொண்ட பிறகு, ஜூன் 27 அன்று சியாட்டிலில் எகிப்தை சந்திக்கிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |