அமெரிக்காவிற்கு போக மாட்டோம்! ஈரானின் போட்டிகளை இங்கேதான் நடத்த வேண்டும் - சம்மேளனத் தலைவர்
ஈரானின் உலகக்கிண்ண கால்பந்து போட்டிகளை, மெக்சிகோவில் நடத்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாக ஈரான் கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் மெஹ்தி தாஜ் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகக்கிண்ண கால்பந்து தொடர்
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ நாடுகள் கூட்டாக இணைந்து நடத்தும், உலகக்கிண்ண கால்பந்து தொடர் சூன் 11ஆம் திகதி தொடங்குகிறது.
ஈரான் கால்பந்து அணி விளையாடும் இரண்டு போட்டிகள், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சியாட்டில் ஆகிய நகரங்களில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், அமெரிக்காவின் தாக்குதல் காரணமாக அங்கு சென்று விளையாட வாய்ப்பில்லை என ஈரான் தரப்பில் கூறப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), ஈரான் தேசிய கால்பந்து அணி உலகக்கிண்ணப் போட்டிகளில் பங்கேற்பது 'அவர்களின் சொந்த உயிருக்கும், பாதுகாப்பிற்கும்' உகந்ததாக இருக்காது என்று கடந்த வாரம் கூறினார்.
ஈரான் கால்பந்து சம்மேளனம்
இந்த நிலையில், ஈரானின் போட்டிகளை மெக்சிகோவில் நடத்த அந்நாட்டு கால்பந்து சம்மேளனம் முடிவு செய்துள்ளது.
மெக்சிகோவில் உள்ள ஈரான் தூதரகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட ஓர் அறிக்கையில், ஈரான் கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் மெஹ்தி தாஜ் (Mehdi Taj) கூறியதாக ஒரு தகவல் இடம்பெற்றுள்ளது.
அதில், "ஈரான் தேசிய அணியின் பாதுகாப்பைத் தன்னால் உறுதி செய்ய இயலாது என்று ட்ரம்ப் வெளிப்படையாகவே கூறியுள்ள நிலையில், நாங்கள் நிச்சயமாக அமெரிக்காவிற்கு பயணம் மேற்கோள்ள மாட்டோம். உலகக் கிண்ணத் தொடரில் ஈரானின் போட்டிகளை மெக்சிகோவிலேயே நடத்துவது தொடர்பாக, நாங்கள் தற்போது ஃபிபா-வுடன் (FIFA) பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்" என்று கூறியுள்ளார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |