இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி
காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானின் அழுத்தம் காரணமாக மேற்கத்திய நாடுகளின் ஒப்புதலுடன் ஐ.நா மன்றம் இந்தியாவிற்கு எதிராக பொருளாதாரத் தடைகள் உட்பட நடவடிக்கை எடுக்கவிருந்த நிலையில் ஈரான் தலையிட்டது.
ஈரானுக்கு ரகசிய தூதர்
1991 பொருளாதார சரிவுக்குப் பிறகு, இந்தியா பலவீனமாக இருந்தது. மேற்கத்திய நாடுகள் பாகிஸ்தானை ஆதரிக்கும் நிலை, மட்டுமின்றி, கத்தார், குவைத் உட்பட இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பும் பாகிஸ்தான் உறுப்பு நாடு என்பதால் ஆதரித்து வந்தது.
இந்த நிலையில் பிரதமர் நரசிம்மராவு அதிரடி முடிவொன்றை எடுத்தார். ஐ.நா. தீர்மானம் தொடங்குவதற்கு முன்பே அதை நிறுத்த ஈரானுக்கு ஒரு ரகசிய தூதரை அனுப்பினார்.
அப்போது மருத்துவமனை சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்த வெளிவிவகார அமைச்சர் தினேஷ் சிங் இந்தியாவின் கடைசி நம்பிக்கையாக இருந்தார். சிகிச்சையை பாதியிலேயே நிறுத்திய தினேஷ் சிங் சிறப்பு இராணுவ விமானம் ஒன்றில் ரகசியமாக ஈரானுக்குப் பறந்தார்.
ஈரானின் வெளிவிவகார அமைச்சர் டாக்டர் அலி அக்பர் வேலாயதி, நெறிமுறைகளை மீறி, விமானத்தின் அருகேயே வந்து அமைச்சர் தினேஷ் சிங்கை வரவேற்றார்.
சக்கர நாற்காலியில் வந்திறங்கிய அமைச்சர் சிங், பிரதமர் ராவின் தனிப்பட்ட செய்தி ஒன்றை ஈரானிய ஜனாதிபதி அலி அக்பர் ஹஷேமி ரஃப்சஞ்சானியிடம் ஒப்படைத்தார்.
பாகிஸ்தானின் திட்டம்
மட்டுமின்றி, ஜனாதிபதி ரஃப்சஞ்சானி, வெளிவிவகார அமைச்சர் வேலாயதி, சபாநாயகர் நாடேக்-நூரி உள்ளிட்டவர்களை தனித்தனியாக சந்தித்து இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்கினார், அத்துடன் ஈரானால் மட்டுமே இந்த நெருக்கடியில் இருந்து இந்தியாவை காப்பாற்ற முடியும் என்பதையும் விளக்கியுள்ளார்.
அன்றிரவே ஈரானில் இருந்து புறப்பட்ட அமைச்சர் சிங், இந்தியா திரும்பியதும் நேரிடையாக மருத்துவமனைக்கு விரைந்தார். கடும் பதற்றம் மிகுந்த 72 மணி நேரம், ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மனித உரிமைகள் கவுன்சிளை நாட பாகிஸ்தான் தயாரான நிலையில், குறித்த பிரேரணையை ஆதரிக்க ஈரான் மறுத்தது.
அடுத்த சில மணி நேரங்களில் மேற்கத்திய நாடுகளும் விலகியது, பாகிஸ்தானின் திட்டம் தவிடுபொடியானது. இதனால் இந்தியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகள் மற்றும் உலகளாவியத் தனிமைப்படுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் கைவிடப்பட்டது.
காஷ்மீர் விவகாரத்தில் தொடர்புடைய இரு நாடுகளும் மட்டுமே தீர்வை எட்ட வேண்டும் என்றும், மேற்கத்திய நாடுகளின் தலையீடு தேவையில்லை என்ற முடிவு எட்டப்பட்டது.
இதன் பின்னர் ஈரான் - இந்தியா உறவு நெருக்கமடைய, பாகிஸ்தான் ஈரானிடம் இருந்து விலகியது. உரிய நேரத்தில் ஈரானின் முயற்சி இந்தியாவை பெரும் நெருக்கடியில் இருந்து காப்பாற்றியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |