இளம்பெண் தன் காதலை ஏற்க மறுத்ததால் இளைஞர் செய்த மோசமான செயல்: தண்டனையை மாற்றிய ஜேர்மன் நீதிமன்றம்
இளம்பெண் ஒருவர் ஜேர்மனியில் வேலை தேடி வந்த இடத்தில், அவர் தன் காதலை ஏற்க மருத்ததால், அவரை கொடூரமாக கொலை செய்தார் ஒரு இளைஞர்.
Fatemeh B. (28) என்னும் அந்த இளம்பெண், ஈரான் நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். அவர் எப்படியாவது ஜேர்மன் மொழி கற்று ஒரு வேலையைத் தேடிக்கொள்ளவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் ஜேர்மனிக்கு வந்திருக்கிறார்.
அவருக்கும் Zyad S. (25) என்ற ஈராக்கைச் சேர்ந்த இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மூன்று மாதங்களே Fatemehயுடன் பழகிய நிலையில், Zyad அவரை தன் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயன்றிருக்கிறார். தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறும் அவர் Fatemehயை வற்புறுத்தியிருக்கிறார். Fatemehயோ, வேலை தேடிக்கொள்வதிலேயே கவனம் செலுத்தி, Zyadஐ திருமணம் செய்துகொள்ள மறுப்புத் தெரிவித்திருக்கிறார்.
தன்னை Fatemeh திருமணம் செய்துகொள்ள மாட்டார் என்பதைப் புரிந்துகொண்ட Zyad, அவரைக் கொல்ல முடிவு செய்திருக்கிறார்.
2019ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 16ஆம் திகதி மாலை, Fatemehயை ஏமாற்றி கிராமப்பகுதிக்கு தன்னுடன் காரில் அழைத்துச் சென்ற Zyad, ஆளரவமற்ற ஒரு இடத்தில் வைத்து அவரைக் கத்தியால் குத்திக் கொடூரமாக கொலை செய்திருக்கிறார்.
பின்னர், உடலில் 34 இடங்களில் கத்திக்குத்துக் காயங்கள் மற்றும் கீறல்களுடன் Fatemehயின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட Zyadக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால், ஜேர்மன் பெடரல் நீதிமன்றம் இந்த தண்டனை போதுமானதல்ல என கருதியதைத் தொடர்ந்து வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதைத் தொடர்ந்து, இம்மாதம் (டிசம்பர்) 20ஆம் திகதி, Zyadக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறைந்தபட்சம் 15 ஆண்டுகளுக்கு Zyadஆல் ஜாமீனிலும் வரமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.