பட்டப்பகலில் இளம் ஆசிரியருக்கு நேர்ந்த துயரம்: நாடே திரண்டு செலுத்திய அஞ்சலி
அயர்லாந்தில் இளம் ஆசிரியர் ஒருவர் பட்டப்பகலில் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தில் பொலிசார் இரண்டாவது சந்தேக நபரை அடையாளம் கண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அயர்லாந்து முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்தில், நாடே திரண்டு கொல்லப்பட்ட ஆசிரியருக்காக அஞ்சலி தெரிவித்து வருகிறது.
அயர்லாந்தின் Tullamore பகுதியில் புதன்கிழமை மதியத்திற்கு மேல் ஜோகிங் சென்ற 23 வயது ஆசிரியர் ஆஷ்லிங் மர்பி மர்மமான முறையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்ட பொலிசார் 40 வயது நபரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளதுடன், விசாரணைக்கு பின்னர், அவர் மீது வழக்கேதும் பதியாமல் விடுவித்துள்ளனர்.
ஆனால் அந்த நபருக்கும் குடும்பத்திற்கு பொதுமக்களிடம் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, அவர் குடும்பத்துடன் தலைமறைவானார் என தெரியவந்துள்ளது. இரண்டு நாட்கள் பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட அந்த நபர், உண்மையில் ஆசிரியர் கொலை வழக்கில் தொடர்புடையவர் அல்ல என விசாரணை அதிகாரிகள் உறுதி செய்துள்ளதை அடுத்தே விடுவிக்கப்பட்டார்.
ஆனால், அவர் தான் குற்றவாளி என சமூக ஊடகங்களில் அவர் புகைப்படம் உள்ளிட்ட தகவல்கள் வெளியான நிலையில், அவருக்கு பொதுமக்களிடம் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, வெளியான உடற்கூராய்வில், ஆசிரியர் ஆஷ்லிங் மர்பி கழுத்தை நெரித்தே கொல்லப்பட்டுள்ளதாகவும், அவர் அந்த கொலையாளியிடம் இருந்து தப்ப போராடியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொலைக்கு முன்னர் ஆஷ்லிங் மர்பியை இரகசியமாக கண்காத்திள்ளனர் அல்லது அவரை எப்போதும் பின் தொடர்ந்துள்ளனர் என அதிகாரிகள் தரப்பில் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தலைநகர் டப்ளினில் திரளான மக்கள் கூடி அஞ்சலி கூட்டம் முன்னெடுத்ததாக தெரிய வந்துள்ளது.
அயர்லாந்து பொலிசார் மீண்டும் பொதுமக்களிடம் இந்த கொலை வழக்கு தொடர்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.
தகவல் தெரியவரும் பொதுமக்கள் விசாரணை அதிகாரிகளை அணுக வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.