ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோருக்கு அச்சத்தை உருவாக்கிவரும் விடயம்: இந்திய இளம்பெண்ணின் முயற்சி
ஜேர்மனி ஒரு பக்கம் புலம்பெயர்வோரை, குறிப்பாக, திறன்மிகுப் பணியாளர்களை வரவேற்கிறது. மறுபக்கமோ, நாட்டின் சில பகுதிகளில் புலம்பெயர்வோர் மீதான வெறுப்பு அதிகரித்துவருகிறது.
புலம்பெயர்தல் ஜேர்மனிக்கு அச்சுறுத்தலா?
ஜேர்மனியின் சாக்ஸனி முதலான மாகாணங்களில், வலது சாரிக் கட்சியான AFD கட்சி வேகமாக வளர்ச்சியடைந்துவருகிறது. அந்தக் கட்சி, புலம்பெயர்தலுக்கு எதிரான கருத்துக்கள் கொண்ட கட்சியாகும். அந்தக் கட்சி, புலம்பெயர்தல் ஜேர்மனிக்கு அச்சுறுத்தல் என்னும் கருத்தைக் கொண்டுள்ளது.
இந்நிலையில், அடுத்த தேர்தலில், AFD கட்சி பெருமளவில் வெற்றி பெரும் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
புலம்பெயர்ந்தோருக்கு உருவாகியுள்ள அச்சத்துக்குக் காரணம்
இந்தியாவிலிருந்து 10 ஆண்டுகளுக்கு முன் ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்த ஃபாத்திமா தர்பார் (Fatema Darbar), அதே சாக்ஸனியின் ட்ரெஸ்டன் நகரில் நிறுவனம் ஒன்றை உருவாக்கி நடத்தி வருகிறார்.
ஜேர்மனியில் ஏன் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படுகின்றன என்பதை நேரடியாக பார்ப்பதற்காக, அந்த போராட்டங்களில் ஒன்றில் யாருக்கும் தெரியாதவகையில் கலந்துகொண்டுள்ளார் ஃபாத்திமா. அந்த போராட்டங்களில் புலம்பெயர்ந்தோர் மீது பயங்கர வெறுப்பு காணப்பட்டதை தன்னால் தெளிவாக உணர முடிந்ததாக தெரிவிக்கிறார் அவர்.
ஜேர்மனி, புலம்பெயர்ந்தோருக்கு பாதுகாப்பற்ற நாடாக மாறிவருவதாக உணர்வதாக தெரிவிக்கிறார் ஃபாத்திமா.
என்றாலும், ஜேர்மனிக்கு வரும் புலம்பெயர்ந்தோர் ஜேர்மன் மக்களுடன் ஒருங்கிணைந்து வாழவேண்டும் என தான் விரும்புவதாக தெரிவிக்கிறார் அவர். ஆகவே, தன்னால் இயன்றவரையில் ஜேர்மனிக்கு வருவோர் சொந்த நாட்டில் வாழ்வதுபோன்ற ஒரு நிலையை உருவாக்க முயற்சித்துவருகிறார் ஃபாத்திமா.
ஜேர்மனிக்கு திறன்மிகுப் பணியாளர்கள் தேவை
விடயம் என்னவென்றால், ஜேர்மனியில் ஓய்வு பெறும் வயதை அடைபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அவர்களுடைய இடத்தை நிரப்ப ஜேர்மனியில் திறன்மிகுப் பணியாளர்கள் இல்லை.
ஆக, புலம்பெயர்ந்தோர் இல்லையென்றால்தான் ஜேர்மனிக்கு ஆபத்து. ஏனென்றால், ஜேர்மன் பொருளாதாரத்தை வளர்க்க நிச்சயம் புலம்பெயர்ந்தோர் தேவை என்பதுதான் உண்மை.
ஆனால், அரசியல் செய்வதற்காக வலதுசாரிக் கட்சிகள் புலம்பெயர்ந்தோர் மீது வெறுப்பை வளர்த்துவருகின்றன. அந்த வெறுப்பு புலம்பெயர்ந்தோர்க்கு அச்சத்தை உருவாக்கியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |