ஈரான் எடுத்த அதிரடி முடிவு... இந்தியாவில் விலைவாசி உயர வாய்ப்பு?
அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகளுக்கு பதிலடி அளிக்கும் வகையில் ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடினால் இந்தியாவில் பணவீக்கம் உயரும் நெருக்கடி இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
விலைகள் அதிகரிக்கக்கூடும்
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடந்து வரும் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த உயர்வு இந்தியாவிற்கு கவலை அளிக்கலாம். உலகளவில் எண்ணெய் விலைகள் தொடர்ந்து உயர்ந்தால், இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைகள் அதிகரிக்கக்கூடும்.
மேலும், உலகின் எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20 சதவீதம் அளவிற்கு முன்னெடுக்கப்படும் ஒரு முக்கிய பாதையான ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பான ஈரானின் முடிவை இந்தியா உட்பட உலக நாடுகளின் அரசாங்கங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.
இந்த நீரிணையானது சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஈராக் போன்ற நாடுகளிலிருந்து எண்ணெய் ஏற்றுமதிக்கு மிகவும் முக்கியமானதாகும். ஹார்மூஸ் நீரிணையை மூடும் ஈரானின் முடிவு உலக அளவில் எண்ணெய் விநியோகத்தை பாதிக்க செய்யும்.
இருப்பினும், இந்தியா சமீபத்தில் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை அதிகரித்துள்ளது. உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து, இந்தியா ரஷ்யாவிடமிருந்து அதிக எண்ணெய் வாங்கியுள்ளது, இது புவிசார் அரசியல் பதட்டங்களின் போதும் நிலையான விநியோகத்தை பராமரிக்க உதவும்.
ஆனால் எரிவாயு விநியோகம் குறித்த கவலைகள் அதிகரித்துள்ளது. இந்தியாவின் இயற்கை எரிவாயுவின் பெரும்பகுதி வளைகுடா நாடுகளிலிருந்து வருகிறது. எந்தவொரு இடையூறும் குழாய் எரிவாயு மற்றும் சமையல் எரிவாயு விலைகளை அதிகரிக்கக்கூடும் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |